உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில் கனடா அணிக்கு எதிராக இன்று நடைபெற்ற போட்டியில் வெற்றி பெற்றுள்ள பாகிஸ்தான் அணி சூப்பர் 8 வாய்ப்பை தக்க வைத்துக் கொண்டுள்ளது.
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் மேற்கு இந்திய தீவுகள் மற்றும் அமெரிக்காவில் நடைபெற்று வருகின்றன. மொத்தம் 20 அணிகள் 4 குரூப்புகளாக பிரிக்கப்பட்டு லீக் சுற்று போட்டிகள் நடைபெற்று வருகின்றன.
ஒவ்வொரு குருப்பிலும் முதல் இரு இடங்களை பெறும் அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறும். இந்த நிலையில் குருப் ஏ-வில் இடம்பெற்றுள்ள பாகிஸ்தான் அமெரிக்கா மற்றும் இந்தியாவுக்கு எதிரான போட்டிகளில் தோல்வியடைந்திருந்தது.
இந்நிலையில் இன்று நியூயார்க் மைதானத்தில் கனடாவுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பவுலிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து கனடா அணியின் தொடக்க வீரர்களாக, ஆரோன் ஜான்சன், நவ்நீத் தைவால் களம் இறங்கினர். தைவால் 4 ரன்னிலும், பர்கத் சிங் 2 ரன்னிலும், நிகோலஸ் கிர்டோன் 1 ரன்னிலும், விக்கெட் கீப்பர் ஷ்ரேயாஸ் மோவா 2 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
விக்கெட்டுகள் ஒருபக்கம் விழுந்தாலும் அதிரடியான பேட்டிங்கை வெளிப்படுத்திய ஆரோன் ஜான்சன் 44 பந்துகளில் தலா 4 சிக்சர் பவுண்டரியுடன் 52 ரன்கள் எடுத்து வெளியேறினார். 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்த கனடா அணி 106 ரன்கள் எடுத்தது.
107 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்கை நோக்கி களம் இறங்கிய பாகிஸ்தான் அணியில் தொடக்க வீரர் சைம் அயுப் 6 ரன்னில் ஆட்டமிழந்து அதிர்ச்சி கொடுத்தார். இதன் பின்னர் முகமது ரிஸ்வானுடன் இணைந்த கேப்டன் பாபர் ஆசம் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
2 ஆவது விக்கெட்டிற்கு இருவரும் 63 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். பாபர் ஆசம் 33 ரன்னில் வெளியேற, ரிஸ்வான் கடைசி வரை நின்று 53 ரன்கள் எடுத்து ஆட்டத்தை முடித்துக் கொடுத்தார். 15 பந்துகள் மீதம் இருந்த நிலையில் பாகிஸ்தான் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி இலக்கை எட்டியது.
இந்த வெற்றியின் மூலம் குரூப் ஏ பிரிவில், பாகிஸ்தான் அணி 3 ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
.
&w=750&resize=750,375&ssl=1)
