மும்பை நடிகை நூர் மலபிகா தாஸ், தனது வீட்டில் மர்மான முறையில் இறந்து கிடந்தார். காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
கத்தார் ஏர்வேஸின் முன்னாள் விமான பணிப்பெண்ணாக இருந்த நூர் மலபிகா தாஸ், அசாமைச் சேர்ந்தவர். ஆனால் மும்பையின் லோகண்ட்வாலாவில் வசித்து வந்தார். 2023ஆம் ஆண்டு கஜோலுடன் இணைந்து நடித்த ‘தி ட்ரையல்’ வலைத் தொடர் மூலம் பிரபலமானவர். சிஸ்கியான், வால்கமன், தீகி சாட்னி, ஜகன்யா உபயா, சரம்சுக். தேகி ஆண்டகி, பேக்ரோட் ஹுஸ்டலே போன்ற தொடர்களிலும் நடித்துள்ளார்.
ஜூன் 6ஆம் தேதியில் நூர் மலபிகாவின் வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசுவதைக் கண்டு, அவரது அண்டை வீட்டினர் காவல்துறையினருக்கு தகவல் அளித்ததை அடுத்து, நூர் மலபிகாவின் வீட்டின் கதவை உடைத்து திறந்து பார்த்தபோது, அவரது உடல் சிதைந்த நிலையில் இறந்து கிடந்தது தெரியவந்தது.
காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில், நூர் மலபிகாவின் வீட்டிலிருந்து மருந்துகள் மற்றும் மொபைல் போன்கள் உள்ளிட்டவற்றை சேகரித்துள்ளனர். ஆனால் தற்கொலைக் குறிப்புகள் எதுவும் கிடைக்கவில்லை. பிரேதப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மலபிகாவின் வயதான பெற்றோர் மும்பைக்கு வரவியலாத காரணத்தினால், அவரது நண்பரும் நடிகருமான அலோக்நாத் பதக் அவரது உடலை தகனம் செய்துள்ளார்.

