ஜம்முவில் பக்தர்கள் பயணித்த பேருந்தை குறிவைத்து பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் குழந்தைகள் உள்பட 10 பேர் உயிரிழந்தனர்.
ஜம்மு காஷ்மீரின் ரியாசியில் உள்ள ஷிவ்கோரிக்கு பக்தர்களை ஏற்றிச் சென்ற பேருந்து நேற்று மாலை 6.10 மணியளவில் ரஜோரி மாவட்டத்தின் எல்லையான பூனி பகுதியில் சென்று கொண்டிருந்தது. அப்போது, எதிர்பாராத விதமாக பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சுடு நடத்தினர். அப்போது, ஓட்டுநர் மீதும் குண்டு பாய்ந்ததால், கட்டுப்பாட்டை இழந்த பேருந்து பள்ளத்தில் பாய்ந்தது. இதில் மேலும் சில பயணிகள் படுகாயம் அடைந்தனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினரும், ராணுவத்தினரும் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். அவர்களுடன் உள்ளூர் மக்களும் உதவிக்கு வந்தனர். பேருந்தை மீட்டு, அதில் இருந்த அனைத்து பயணிகளும் வெளியேற்றப்பட்ட நிலையில், குழந்தைகள் உள்பட 10 பேர் பலியானது தெரியவந்தது. அத்துடன், 33 பேர் படுகாயம் அடைந்திருந்தனர். அவர்கள் உடனடியாக, அருகில் உள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்த சம்பவத்திற்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி உள்ளிட்ட பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்த கொடூரமான செயல் மனித குலத்திற்கு எதிரான குற்றம் எனக் கூறியுள்ள குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருடன் தேசம் நிற்பதாக தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க:
பிரதமர் இலவச வீடு வழங்கும் திட்டத்தில் பயன்பெற வேண்டுமா? வழிமுறைகள் இதோ!
பயங்கரவாத தாக்குதலால் ஏற்பட்டுள்ள நிலைமையைத் தொடர்ந்து கண்காணித்து, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அனைத்து உதவிகளையும் உறுதி செய்யுமாறு, ஜம்மு காஷ்மீர் துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்காவுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார். இதனிடையே, இந்த வெட்கக்கேடான சம்பவம் ஜம்மு காஷ்மீரில் கவலைக்கிடமான பாதுகாப்புச் சூழலை விளக்கும் உண்மையான படம் என காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
.
&w=750&resize=750,375&ssl=1)
