மத்திய அமைச்சரவையில் அதிக சொத்து மதிப்புடைய அமைச்சர் என்ற பெருமையை தெலுங்கு தேசம் கட்சியின் பெம்மசனி சந்திரசேகர் பெற்றுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான 18-ஆவது மத்திய அமைச்சரவை ஞாயிற்றுக்கிழமை பதவியேற்றுக் கொண்டது. இதில், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள தெலுங்கு தேசம் கட்சியின் பெம்மசனி சந்திரசேகர் (வயது 48) இணையமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார்.
இந்த மக்களவைத் தேர்தலில் போட்டியிட்ட 8,390 வேட்பாளர்களில் இவரின் சொத்து மதிப்பே அதிகம். தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்யப்பட்ட பிரமாணப் பத்திர தரவுகளின்படி, சந்திரசேகரின் சொத்து மதிப்பு ரூ.5,705 கோடியாகும்.
ஆந்திரத்தின் குண்டூா் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வென்ற சந்திரசேகா், வெளிநாடுவாழ் இந்தியா்கள் (என்ஆா்ஐ) பிரிவைச் சோ்ந்த மருத்துவரும் தொழிலதிபருமாவார்.
குண்டூர் மாவட்டம் புரிபாலம் கிராமத்தில் பிறந்த சந்திரசேகர், ஹைதராபாத்தில் மருத்துவ இளநிலை படிப்பும், வெளிநாட்டில் மருத்துவ முதுநிலை படிப்பும் படித்துள்ளார். தொடக்கத்தில் மருத்துவ பேராசிரியராக பணியாற்றிய சந்திரசேகர், தற்போது சொந்தமாக நிறுவனங்களை நடத்தி வருகிறார்.

