புகழ்பெற்ற ஐஐடி கல்லூரியில் சேர்ந்து படிப்பை பாதியிலேயே நிறுத்தினாலும், வாழ்க்கையில் பல சாதனைகளை படைத்தவர்களில் ஒருவர்தான் தாமஸ் குரியன். தற்போது கூகுள் க்ளவுடின் (Google Cloud) தலைமை செயல் அதிகாரியாக இருக்கும் தாமஸ் குரியன் கூகுள் நிறுவனத்தின் சிஇஓ சுந்தர் பிச்சையை விட செல்வந்தர் என்பது உங்களுக்கு தெரியுமா?
உலகிலேயே அதிகம் சம்பளம் வாங்கும் இந்திய சிஇஓ-வாக சுந்தர் பிச்சை திகழ்கிறார் என்பது நாம் அனைவருக்குமே தெரிந்த விஷயம். 2.14 ட்ரில்லியன் மதிப்புள்ள கூகுள் நிறுவனத்தில் 2022-ம் ஆண்டு சுந்தர் பிச்சைக்கு கொடுக்கப்பட்ட சம்பளம் மட்டுமே சுமார் 226 மில்லியன் டாலர். அந்த வருடத்தில் சுந்தர் பிச்சையின் சொத்து மதிப்பு சுமார் ரூ.10,215 கோடியாக இருந்தது. ஆனால் தாமஸ் குரியனின் சொத்து மதிப்பு ரூ.15,000 கோடிக்கும் மேல் இருக்கும் எனக் கூறப்படுகிறது.
கேரளாவில் பிறந்த தாமஸ் குரியன் உலகின் மிக வெற்றிகரமான இந்திய நிர்வாகிகளில் ஒருவராக திகழ்கிறார். 2018-ம் ஆண்டு இவர் கூகுள் க்ளவுடின் சிஇஓ-வாக நியமிக்கப்பட்டார். இவர் பதவியேற்றதும் நிறுவனத்தின் செயல் திட்டங்களை மாற்றியமைத்து வாடிக்கையாளர் சேவைக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதில் கவனம் செலுத்தினார். மேலும் விற்பனை அதிகாரிகளை ஊக்கப்படுத்தும் வகையில் அவர்களின் சம்பளத்தையும் உயர்த்தினார். கூகுள் க்ளவுட் நிறுவனத்தை புதுப்பித்ததில் இவருக்கு முக்கியமான பங்கிருக்கிறது.
பெங்களூரில் உள்ள புனித ஜோசப் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயின்ற தாமஸ் குரியன், சென்னை ஐஐடி-யில் சேர்ந்தார். ஆனால் அங்கு சேர்ந்த கொஞ்ச நாட்களிலேயே அமெரிக்கவில் உள்ள பிரின்ஸ்டன் பல்கலைகழகத்தில் படிக்க முடிவு செய்தார். இதன் காரணமாக ஐஐடி படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு உடனடியாக அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்தார். அங்கு எலக்ட்ரிகல் இஞ்சினியரிங் பிரிவில் பட்டப் படிப்பை முடித்த தாமஸ் குரியன், அதற்கடுத்து ஸ்டான்ஃபோர்டு ஸ்கூல் ஆஃப் பிசினஸில் சேர்ந்து எம்பிஏ நிறைவு செய்தார். அதன்பிறகு அமெரிக்காவில் உள்ள McKinsey நிறுவனத்தில் சேர்ந்து பணியாற்ற தொடங்கினார்.
சுமார் ஆறு வருடங்களுக்கும் மேலாக McKinsey நிறூவனத்தில் பணியாற்றிய குரியன், அதற்கடுத்து Oracle நிறுவனத்தில் பணியில் சேர்ந்தார். மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனமான இங்கு பல முக்கியமான பதவிகளை வகித்த தாமஸ் குரியன், 22 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றினார். 32 நாடுகளில் உள்ள இந்நிறுவனத்தின் கிளைகளில் பணியாற்றும் 35,000 ஊழியர்களை இவர் தலைமையேற்று நடத்தி வந்தார். ஆனால் Oracle நிறுவனத்தின் துணை நிறுவனர் லாரி எலிசனோடு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 2018-ம் ஆண்டு அங்கிருந்து ராஜினாமா செய்தார். அதன்பின்னரே கூகுள் நிறுவனத்தில் சேர்ந்து அவர்களின் க்ளவுட் பிரிவின் சிஇஓ-வாக மாறினார்.
.
&w=750&resize=750,375&ssl=1)
