உலகில் ஜனநாயகத்தின் கோட்டையாக விளங்கும் இந்தியா வரலாற்றில் மிகப் பெரிய தேர்தலை வெற்றிகரமாக நடாத்தி முடித்துள்ளது என்று நைஜீரிய வெளிவிவகார அமைச்சர் யூஸுப் மைதமா துக்கர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் ‘எக்ஸ்’ தளத்தில் பதிவிட்டிருப்பதாவது, இந்தியா 1.4 பில்லியன் சனத்தொகையைக் கொண்டுள்ளது. அவர்களில் 968 மில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். அந்த வகையில் இத்தேர்தலை இந்தியா வெற்றிகரமாக நடாத்தி முடித்துள்ளது. இதனையிட்டு இந்திய மக்களுக்கும் வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கருக்கும் பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன்.
அதேநேரம் ஆபிரிக்காவின் பெரிய ஜனநாயக நாடாக விளங்கும் எமது நாட்டில் ஜனநாயக விழுமியங்களை நிலைநாட்டுவதற்காக இந்தியாவுடன் இணைந்து கொள்வதில் பெருமைப்படுகிறோம்’ என்றுள்ளார்.
இந்தியாவின் லோக் சபா தேர்தல் கடந்த ஏப்ரல் 19 ஆம் திகதி முதல் ஜுன் முதலாம் திகதி வரையும் ஏழு கட்டங்களாக நடைபெற்றதோடு, தேர்தல் முடிவுகள் கடந்த 4 ஆம் திகதி வெளியிடப்பட்டது. அதனடிப்படையில் பி.ஜே.பி தலைமையிலான ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்றுள்ளதோடு மூன்றாவது தடவையாகவும் நரேந்திர மோடி பிரதமர் பதவிக்கு தெரிவாகியுள்ளார்.

