இந்தியாவில் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்றது. தொடர்ந்து 3ஆவது முறையாக இந்தியாவின் பிரதமராக மோடி பதவியேற்க உள்ளார். தலைநகர் டெல்லியில் நாளை நடைபெற உள்ள பதவியேற்பு விழாவில் பங்கேறும்படி பல்வேறு நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்க மாலத்தீவு அதிபர் முகமது முய்சுவிற்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. மாலத்தீவுக்கான இந்திய தூதர் முனு மவாகர் இதற்கான அழைப்பிதழை அதிபர் முய்சுவிடம் வழங்கினார். இந்த அழைப்பை முய்சு ஏற்றுக்கொண்டார் என மாலத்தீவு அதிபர் அலுவலகம் தெரிவித்தது.
இந்நிலையில், மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்பதைப் பெருமையாகக் கருதுகிறேன். இது இந்தியா-மாலத்தீவு இடையிலான இருதரப்பு உறவுகள் நேர்மறையான திசையில் சென்றுகொண்டிருப்பதற்கான எடுத்துக்காட்டாக விளங்கும் என அதிபர் முகமது முய்சு தெரிவித்துள்ளார்.


