Last Updated:
அபிஷேக் சர்மா மற்றும் சஞ்சு சாம்சன் ஆகியோர் தங்களது இடத்தை நிலைநிறுத்த தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும்
இளம் கிரிக்கெட் நட்சத்திரமான வைபவ் சூரியவன்ஷி (Vaibhav Sooryavanshi) ஒரு “வித்தியாசமான திறமைசாலி” என்றும், அவரே இந்திய கிரிக்கெட்டின் எதிர்காலம் என்றும் இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் சனத் ஜெயசூர்யா பாராட்டியுள்ளார். அதேவேளையில், அவரை உடனடியாக இந்திய அணியின் பிளேயிங் லெவனில் (Playing XI) சேர்க்க அவசரப்பட வேண்டாம் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
குர்கானில் நடைபெற்ற ‘கார்ப்பரேட் வேர்ல்ட் கப்’ (Corporate World Cup) தொடக்க விழாவின்போது அளித்த பேட்டியில் ஜெயசூர்யா இந்த கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான இந்திய அணியில் சூரியவன்ஷி இடம்பெற்றிருந்தார். இருப்பினும், சஞ்சு சாம்சன் மற்றும் அபிஷேக் சர்மா ஆகியோரே தொடக்க ஆட்டக்காரர்களாகக் களம் இறக்கப்பட்டதால் அவருக்கு விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை.
இது குறித்துப் பேசிய 1996 உலகக்கோப்பை நாயகன் ஜெயசூர்யா, “சூரியவன்ஷி ஒரு தனித்துவமான திறமை படைத்தவர். அவர் இந்திய அணியின் எதிர்காலம் என்பதில் சந்தேகமில்லை. அவருக்கு இன்னும் நிறைய காலம் உள்ளது.
சரியான வாய்ப்புகள் கிடைக்கும் வரை அவருக்குப் போதிய நேரம் வழங்கி ஆதரவளிக்க வேண்டும். வாய்ப்பு கிடைக்கும் போது நிச்சயம் அவர் அதைச் சிறப்பாகப் பயன்படுத்திக் கொள்வார்” என்று கூறியுள்ளார்.
மேலும், இந்திய கிரிக்கெட்டில் நிலவும் கடும் போட்டி குறித்துப் பேசிய அவர், அபிஷேக் சர்மா மற்றும் சஞ்சு சாம்சன் ஆகியோர் தங்களது இடத்தை நிலைநிறுத்த தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என்றார்.
இந்தியாவில் ஒரு வீரருக்கு மாற்றாக களம் இறங்க பல திறமையான வீரர்கள் எப்போதும் தயாராக இருப்பதால், போட்டிகளின் தரம் மிகவும் அதிகமாக உள்ளது என்றும் குறிப்பிட்டார்.


