தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளதால் பல மாவட்டங்களுக்குக் கனமழை எச்சரிக்கையும், மகாவலி கங்கையை அண்டிய தாழ்நிலப் பகுதிகளுக்கு வௌ்ள அபாய எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
நாட்டில் தென்மேற்குப் பருவப் பெயர்ச்சி தீவிரமடைந்துள்ளதன் காரணமாக மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி, மாத்தறை ஆகிய மாவட்டங்களிலும் பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. குறிப்பிட்ட இப்பகுதிகளில் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என்றும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 06 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணித்தியால காலப்பகுதியில் கேகாலை மாவட்டத்திலேயே அதிகபட்சமாக 103.5 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது. இதேவேளை, மகாவலி கங்கையின் மேல் நீரேந்து பகுதிகளில் பெய்துவரும் கடும் மழை காரணமாக, பஸ்பாகே கோரளை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட மகாவலி கங்கையை அண்டிய தாழ்நிலப் பகுதிகளில் வௌ்ளப்பெருக்கு ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் நிலவுவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் எச்சரித்துள்ளது.
கடந்த சில மணித்தியாலங்களாகத் தொடர்ச்சியாகப் பெய்துவரும் கனமழையால் ஆபத்து நிறைந்த தாழ்நிலப் பகுதிகளில் வௌ்ள அபாயம் தீவிரமடைந்துள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களத்தின் நீரியல் மற்றும் அனர்த்த முகாமைத்துவப் பிரிவு தெரிவித்துள்ளது. இதனால் ஆற்றங்கரையோரப் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறும், நீர்மட்டத்தின் போக்கைத் தொடர்ச்சியாகக் கண்காணித்து உயிர் மற்றும் உடமைகளைப் பாதுகாப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
அத்துடன், வௌ்ள அபாயம் உள்ள பகுதிகள் ஊடாகப் பயணிக்கும் வாகனச் சாரதிகள் மற்றும் பொதுமக்கள் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கும் தேவையான அவசர நிவாரண நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கும் சம்பந்தப்பட்ட அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகளுக்கும் அவசரப் பிரிவுகளுக்கும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.
இன்று 20ஆம் திகதி காலை 08 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த எச்சரிக்கை அறிவித்தல், நாளை 21ஆம் திகதி காலை 08 மணி வரை அமுலில் இருக்கும்.


