(ரெ. மாலினி)
மலாக்கா:
மலாக்கா மாநிலத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், காடெக் சட்டமன்றத் தொகுதியில் ம.இ.கா. சார்பில் களம் இறக்கப்படவுள்ள வேட்பாளர் யார் என்பது குறித்த எதிர்பார்ப்பு இந்திய சமூகத்தினர் மத்தியில் அதிகரித்துள்ளது.
அடுத்த வாரம் செவ்வாய்க்கிழமை மலாக்கா மாநில சட்டமன்றம் கலைக்கப்படும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இம்முறை காடெக் தொகுதியில் புதிய முகத்திற்கு வாய்ப்பு வழங்கப்படுமா அல்லது தற்போதைய சட்டமன்ற உறுப்பினர் பி. சண்முகத்திற்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படுமா என்பது முக்கிய கேள்வியாக உள்ளது.
கடந்த ஒரு தவணையாக காடெக் சட்டமன்ற உறுப்பினராகப் பொறுப்பு வகித்து வரும் பி. சண்முகம், 2021ஆம் ஆண்டு நடைபெற்ற மாநிலத் தேர்தலில் 3,022 வாக்குகள் பெற்று 559 வாக்குகள் பெரும்பான்மையில் வெற்றி பெற்றார்.
அந்தத் தேர்தலில் டி.ஏ.பி. சார்பில் போட்டியிட்ட க. சாமிநாதன் 2,463 வாக்குகளையும், பெர்சத்து–பெரிக்காத்தான் நேஷனல் சார்பில் போட்டியிட்ட முகமட் அமீர் பிட்ரி முஹாராம் 2,041 வாக்குகளையும் பெற்றனர்.
இதற்கு முன்னதாக 2018ஆம் ஆண்டு தேர்தலில் க. சாமிநாதன் 4,392 வாக்குகள் பெற்று 307 வாக்குகள் பெரும்பான்மையில் வெற்றி பெற்றிருந்தார். இதனால் கடந்த இரு தேர்தல்களிலும் காடெக் தொகுதியில் வெவ்வேறு அரசியல் அணிகளுக்கு இடையே கடுமையான போட்டி நிலவியிருப்பது குறிப்பிடத்தக்கது.
ம.இ.கா.வில் பல பெயர்கள்
இந்நிலையில், ம.இ.கா.வில் சாத்தியமான வேட்பாளர்களின் பெயர்களில் மலாக்கா மாநில ம.இ.கா. துணைத் தலைவரும் ஜாசின் தொகுதி துணைத் தலைவருமான செ. நடராஜா பெயரும் பேசப்படுகிறது.
கடந்த தேர்தலின்போதும் காடெக் தொகுதிக்கு இவரது பெயர் சிபாரிசு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. எனினும், இறுதி நேரத்தில் இவருக்கு பதிலாக டத்தோ சண்முகத்தின் பெயர் முன்மொழியப்பட்டதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதேபோல், மலாக்கா முதலமைச்சரின் இந்திய நலன் பிரிவின் செயலாளராகவும் மாநில இளைஞர் பிரிவின் தலைவராகவும் செயல்பட்டு வரும் வழக்கறிஞர் புவனேஸ்வரன் பெயரும் சாத்தியமான வேட்பாளராக பேசப்படுகிறது.
மாநில அரசுடன் நெருக்கமாக பணியாற்றி வரும் அவரது பின்னணியும் வேட்பாளர் தேர்வில் கவனிக்கப்படும் அம்சமாக இருக்கலாம் என கூறப்படுகிறது.
மேலும், தங்கபத்து தொகுதியின் தலைவரும் மாநிலச் செயலாளருமான கி. விஸ்வம் பெயரும் சாத்தியமான வேட்பாளராக அரசியல் வட்டாரங்களில் குறிப்பிடப்படுகிறது.
நீண்டகாலமாக கட்சிப் பணிகளில் ஈடுபட்டு வரும் அவர், அடிமட்டக் கிளை உறுப்பினர் நிலையிலிருந்து படிப்படியாக கட்சிப் பொறுப்புகளை ஏற்றவர் என கூறப்படுகிறது. மாநிலச் செயலாளர் உள்ளிட்ட பொறுப்புகளை வகித்துள்ள அவரது அரசியல் அனுபவமும் வேட்பாளர் தேர்வில் பேசப்படும் அம்சங்களில் ஒன்றாக உள்ளது.
டி.ஏ.பி. சார்பில் மீண்டும் சாமிநாதனா?
இதற்கிடையில், காடெக் தொகுதியில் டி.ஏ.பி. சார்பில் க. சாமிநாதன் மீண்டும் போட்டியிடுவாரா அல்லது வேறு தொகுதிக்கு மாற்றப்படுவாரா என்ற எதிர்பார்ப்பும் நிலவுகிறது.
ஏற்கனவே காடெக் சட்டமன்ற உறுப்பினராகப் பதவி வகித்துள்ள சாமிநாதன், பதவியில் இல்லாத காலத்திலும் தொகுதி மக்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்து பல்வேறு சமூக நல உதவிகளைச் செய்து வருவதாக கூறப்படுகிறது.
மறுபுறம், பெர்சாமா சார்பில் பி. லாவேன் காடெக் தொகுதிக்கான வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
இதனால் எதிர்வரும் தேர்தலில் காடெக் தொகுதி மீண்டும் அரசியல் கவனம் பெறும் தொகுதியாக மாறியுள்ளது.
பாரிசான் நேஷனல், பெரிக்காத்தான் நேஷனல் மற்றும் பாஸ் ஆகிய கட்சிகளின் இறுதி தேர்தல் ஏற்பாடுகள் மற்றும் போட்டியிடும் முறை தெளிவாகும் நிலையில், காடெக் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களின் முழுமையான பட்டியல் மேலும் தெளிவாகும்.
மக்கள் எதிர்பார்ப்பு என்ன?
கடந்த தேர்தல்களில் காடெக் தொகுதியில் ஏற்பட்ட வாக்கு மாற்றங்கள், இத்தொகுதியில் நிலவும் போட்டித் தன்மையை வெளிப்படுத்துகின்றன.
இந்நிலையில், இம்முறை காடெக் தொகுதியில் மக்கள் எதிர்பார்க்கும் மாற்றம் என்ன, தற்போதைய அரசியல் நிலைப்பாட்டை தொடர வேண்டுமா அல்லது புதிய தலைமைத்துவத்திற்கு வாய்ப்பு வழங்க வேண்டுமா என்பதும் தேர்தல் களத்தில் முக்கியமாக பேசப்படும் கேள்விகளாக உருவெடுத்துள்ளன.
எனினும், இறுதி வேட்பாளர் பட்டியல் மற்றும் கட்சிகளின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளுக்குப் பின்னரே காடெக் தொகுதியின் தேர்தல் களம் முழுமையாக தெளிவடையும்.
காடேக்கில் ம.இ.கா.வின் அடுத்த வேட்பாளர் யார்? தற்போதைய உறுப்பினருக்கே மீண்டும் வாய்ப்பா, அல்லது புதிய முகமா? இந்தக் கேள்விக்கான பதிலை இந்திய சமூகத்தினர் மட்டுமின்றி காடெக் தொகுதி வாக்காளர்களும் எதிர்பார்த்து வருகின்றனர்.



