பழைய 10 ரூபாய் நோட்டில் யானை, காண்டாமிருகம் ஏன் பொறிக்கப்பட்டது? ஆர்பிஐ இந்த டிசைனை ஏன் தேர்வு செய்தது?
இந்திய ரூபாய் நோட்டின் ஒவ்வொரு டிசைனும் ஒவ்வொரு கதையைச் சொல்லும். இதை பல நேரங்களில் நாம் கவனிப்பதே இல்லை. ஆனால் தினசரி அடிப்படையில் ரூபாய் நோட்டுகளைப் பயன்படுத்தி வருகிறோம். அப்படித்தான் பழைய 10 ரூபாய் நோட்டுகளிலும் யானை, காண்டாமிருகம் மற்றும் புலி ஆகியவற்றின் படங்கள் பொறிக்கப்பட்டிருக்கும். இது ஏன் என்று எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா?
ரூபாய் நோட்டுகளில் ஏன் மிருகங்களின் படம் அச்சிடப்பட்டிருக்கிறது?: சமீபத்திய அறிக்கை ஒன்றில் யுபிஐ தளங்களுக்கு பதிலாக மக்கள் மீண்டும் ரூபாய் நோட்டுகளை அதிகம் பயன்படுத்துவதாக தெரியவந்துள்ளது. ஆக தினசரி அடிப்படையில் நாம் ரூபாய் நோட்டுகளை ஏதோ ஒரு விஷயத்திற்காகப் பயன்படுத்துகிறோம். அப்படி எடுக்கும் போதும் அதில் உள்ள டிசைனை பார்ப்பதில்லை. அதை பார்க்கும் சிலர் அதற்கு என்ன அர்த்தம் என்பதை தெரிந்து கொள்வதில்லை.

ஒவ்வொரு நோட்டின் டிசைனும் தனித்துவமானது. அதேபோல தான் 10 ரூபாய் நோட்டுகளின் பின்புறத்தில் யானை, காண்டாமிருகம் மற்றும் புலி போன்ற விலங்குகள் இடம் பெற்றுள்ளன.
ஏன் ஆர்பிஐ விலங்குகளின் புகைப்படத்தை 10 ரூபாய் நோட்டுக்கு தேர்வு செய்தது தெரியுமா?: இந்தியாவில் இயற்கை பாரம்பரியத்தையும், விலங்கினங்களையும் பிரதிபலிக்கும் வகையில் தான் இந்தப் படங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. பழைய 10 ரூபாய் நோட்டில் இடம் பெற்றுள்ள காண்டாமிருகம் அசாமின் புகழ்பெற்ற காசிரங்கா நேஷனல் பார்கை குறிக்கிறது. இங்குதான் அதிக அளவில் ஒற்றைக்கொம்பு கொண்ட காண்டாமிருகங்கள் இருக்கின்றன. உலகிலேயே இந்த எண்ணிக்கை வேறெங்கும் கிடையாது.
யானை இந்திய கலாச்சாரத்தில் மிக முக்கியமான விலங்காகக் கருதப்படுகிறது. இது இந்தியாவின் தேசிய பாரம்பரிய விலங்காக இருக்கிறது. காடுகளின் சுற்றுச்சூழலை காப்பதில் யானை முக்கிய பங்கு வகிக்கிறது. இதையெல்லாம் கருத்தில் கொண்டு யானையின் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது.
புலி கிட்டத்தட்ட எல்லா காடுகளிலும் தென்படுகிறது. நம் சுற்றுச் சூழலின் முக்கிய அங்கமாக இருக்கிறது. இதை சொல்லும் வகையில் தான் புலியின் படம் பொறிக்கப்பட்டுள்ளது. இந்த 3 விலங்குகளும் இணைந்து இந்தியாவின் இயற்கை வளத்தை நம் கண் முன்னே கொண்டு வருகின்றன.
இதனால்தான் ஒவ்வொரு ரூபாய் நோட்டின் வடிவமைப்பிலும் இந்தியாவின் வரலாறு சார்ந்த விஷயங்கள், கலாச்சார ரீதியான விஷயங்கள், இந்திய பாரம்பரியம், கட்டிடக்கலை, இயற்கை சூழல், விலங்கினங்கள் போன்றவற்றை ஆர்பிஐ பயன்படுத்தியுள்ளது.
2018-ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட மகாத்மா காந்தி படம் கொண்ட 10 ரூபாய் நோட்டில் இந்த வடிவமைப்பு மாற்றப்பட்டது. புதிய 10 ரூபாய் நோட்டின் பின்புறத்தில் யானை, காண்டாமிருகம் மற்றும் புலிக்கு பதிலாக கோனார்க் சூரிய கோவில் இடம் பெற்றுள்ளது. ஆனால் இன்றளவும் பழைய 10 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்து வருகின்றன. இனி புதிய மற்றும் பழைய 10 ரூபாய் நோட்டுகள் உங்கள் கையில் கிடைத்தால் அதிலுள்ள டிசைனை ஒருமுறை உற்றுப் பாருங்கள்!
