
சவூதி அரேபியாவில் இலங்கை தொழிலாளி அனோஜன் சிவராசாவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதாகக் கூறப்படும் விவகாரத்தில் கருணை காட்டுமாறு, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கோரிக்கை விடுத்துள்ளார்.
சவூதி அரேபியாவில் அனோஜன் சிவராசா என்ற இலங்கை புலம்பெயர் தொழிலாளிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக வெளியாகும் தகவல்கள் உறுதிப்படுத்தப்பட்டால், அவருக்கு கருணை காட்டுமாறு, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச? சவூதி அரேபிய அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பில் தனது எக்ஸ் தளத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ள அவர், ஒரு வார்த்தைக்காக ஒரு மனிதனின் உயிரைப் பறிக்கக் கூடாது எனக் குறிப்பிட்டுள்ளதுடன், அவருக்கு பொதுமன்னிப்பு வழங்குவதற்கான வாய்ப்பை சவூதி அதிகாரிகள் திறந்து வைத்திருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
பல நூற்றாண்டுகளாக நிலைத்து நிற்கும் ஒரு மதம், வெறும் அவமதிப்பாகக் கருதப்படும் ஒரு சொல்லினால் சிறுமை அடைந்துவிட முடியாது என சுட்டிக்காட்டியுள்ள சஜித் பிரேமதாச, ஒரு சொல்லுக்குப் பதிலாக உயிரைப் பறிப்பதில் ஒரு மதத்தின் வலிமை தங்கியிருக்கக் கூடாது என்றும் வாதிட்டுள்ளார்.
அனைத்து உன்னதமான மதங்களின் இதயப் பகுதியாக விளங்கும் கருணையை சவூதி அரேபியா வெளிப்படுத்தும் என்று தான் நம்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
சவூதி அரேபியாவில் பணிபுரியும் இலங்கைத் தொழிலாளியான சிவராசாவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி வரும் பின்னணியிலேயே எதிர்க்கட்சித் தலைவர் இந்தக் கருத்துகளை வெளியிட்டுள்ளார்.

