கோலாலம்பூர்:
கெடா மாநிலத்தில் விவசாயிகளுக்கான உரம் விநியோகம் தாமதமான விவகாரம் தொடர்பான விசாரணையின் கீழ், வேளாண் மற்றும் உணவுப் பாதுகாப்புத் துறை அமைச்சர் முகமட் சாபு மற்றும் அந்த அமைச்சின் தலைமைச் செயலாளரிடம் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (MACC) வாக்குமூலம் பதிவு செய்துள்ளது.
வேளாண் மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சகத்தால் உரம் விநியோகத்திற்காக ஒரு குறிப்பிட்ட நிறுவனம் நியமிக்கப்பட்டது தொடர்பாகக் கடந்த ஆகஸ்ட் 26-ஆம் தேதி MACC விசாரணையைத் தொடங்கியது. இந்த விவகாரம் தொடர்பாக இதுவரை 37 சாட்சிகள் அழைக்கப்பட்டு அவர்களிடம் வாக்குமூலங்கள் பெறப்பட்டுள்ளதாக ஆணையத்தின் தலைமை ஆணையர் அப்துல் ஹாலிம் அமான் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் முகமட் சாபுவின் வாக்குமூலம் கடந்த செப்டம்பர் 16-ஆம் தேதியும், அமைச்சின் தலைமைச் செயலாளரின் வாக்குமூலம் செப்டம்பர் 15-ஆம் தேதியும் பதிவு செய்யப்பட்டுள்ளன.
“இந்த விசாரணை இன்னும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இன்னும் ஓரிரு வாரங்களில் முழு விசாரணையும் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.” என்று அவர் கூறினார்.
போலி ஆவணங்களைப் பயன்படுத்தியது தொடர்பான குற்றவியல் சட்டத்தின் பிரிவு 471-இன் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. விசாரணையை முழுமைப்படுத்த மேலும் பல சாட்சிகளிடம் வாக்குமூலம் பெறப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆணையத்தின் முதற்கட்ட விசாரணையில், சம்பந்தப்பட்ட நிறுவனம் மொத்தம் 6,16,015 மூடை உரங்களை விநியோகிக்க வேண்டிய நிலையில், செப்டம்பர் மாதம் வரை 3,33,655 மூடைகள் மட்டுமே விநியோகம் செய்யப்பட்டுள்ளது தெரியவந்தது. இதன் மூலம் சுமார் 2,82,360 மூடைகள் தட்டுப்பாடு நிலவுவது உறுதியாகியுள்ளது.
தற்போது இந்த வழக்கில் நிர்வாகச் சிக்கல்களை விடக் குற்றவியல் அம்சங்களுக்கே அதிக முக்கியத்துவம் கொடுத்து MACC விசாரணை நடத்தி வருகிறது.



