Tamilnadu
oi-Vignesh Selvaraj
புதுக்கோட்டை: “படித்து வாங்கிய பட்டத்தை கல்வெட்டில் போடுவதற்கு இந்த ஆட்சியாளர்களுக்கு பதற்றம் வருகிறது. முதலமைச்சருக்கு பட்டம் இல்லை என்பதால், நான் படித்து வாங்கிய பட்டத்தை எடுப்பதற்கு யார் அனுமதி கொடுத்தார்கள்.” என திமுக எம்.எல்.ஏ முத்துராஜா கேள்வி எழுப்பியுள்ளார்.
புதுக்கோட்டை அருகே வண்ணாரபபட்டியில் 15 லட்ச ரூபாய் மதிப்பில் அங்கன்வாடி கட்டடம் திறப்பு விழா கல்வெட்டில், மக்கள் பிரதிநிதிகளின் பெயர்களுக்கு பின்னால் அவர்களின் படிப்பு இடம்பெற்றிருந்த நிலையில், அதனை மாற்றி, பட்டம் நீக்கப்பட்ட கல்வெட்டை தொழிலாளர் நலத்துறை அமைச்சர் முகமது பர்வேஸ் திறந்து வைத்தார்.

நேற்று காலை வரை இருந்த கல்வெட்டில் அமைச்சர் முகமது பர்வேஸ் பி.ஏ.எல்.எல்.பி என்றும் எம்.எல்.ஏ முத்துராஜா எம்.பி.பி.எஸ், திருச்சி நாடாளுமன்றத் தொகுதி எம்.பி துரை வைகோ எம்.பி.ஏ என்றும் இருந்தது. ஆனால், மாலையில் கல்வெட்டு மாற்றப்பட்டு, பெயர்களுக்கு பின்னால் இருந்த படிப்பு நீக்கப்பட்டு பெயர்கள் மட்டும் உள்ள கல்வெட்டு வைக்கப்பட்டது. இதனை அமைச்சர் திறந்து வைத்துள்ளார்.
இந்நிலையில் இதுதொடர்பாக திமுக எம்.எல்.ஏ வை.முத்துராஜா வெளியிட்டுள்ள பதிவில், “பெயருக்குப் பின்னால் சாதிப் பட்டங்கள் போடும் நிலையை மாற்றி, படித்து வாங்கிய பட்டங்களைப் போடுகிற அளவுக்கு தமிழ்நாட்டை பண்படுத்தியது திராவிட இயக்கம். ஆனால், படித்து வாங்கிய பட்டத்தைப் போடுவதற்கு இந்த ஆட்சியாளர்களுக்கு பதற்றம் வருகிறது. Insecure Insta அமைச்சரின் அக்கப்போருக்கு இல்லையா சார் ஒரு End.
என்னுடைய புதுக்கோட்டை தொகுதிக்குட்பட்ட வண்ணாரப்பட்டி பகுதியில் கழக ஆட்சியின் போது நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு ஓர் அங்கன்வாடி மையம் கட்டப்பட்டுள்ளது. அதனை திறந்து வைப்பதற்காக இந்த ஆட்சியாளர்கள் ஒரு கல்வெட்டை தயார் செய்தார்கள்.
அதில், முதலமைச்சர், மாவட்ட அமைச்சர், நாடாளுமன்ற உறுப்பினர் பெயர்களோடு, சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையில் எனது பெயரும் இடம்பெற்றிருந்தது.
திடீரென என்ன நினைத்தார்களோ தெரியவில்லை. அந்த கல்வெட்டு வேண்டாம் – வேறு கல்வெட்டு கொண்டு வருகிறோம் என்று இன்னொன்றை கொண்டு வந்தார்கள்.
அந்த இன்னொரு கல்வெட்டை பார்த்தால், நான் கஷ்டப்பட்டு படித்து வாங்கிய MBBS பட்டம் என் பெயருக்குப் பின்னால் இல்லை. அமைச்சர் – நாடாளுமன்ற உறுப்பினர் பெயர்களுக்குப் பின்னால் இருந்த பட்டங்களும் புதிய கல்வெட்டில் காணாமல் போய்விட்டன.
முதலமைச்சர் பெயருக்குப் பின்னால் போடுவதற்கு படித்து வாங்கிய பட்டமில்லை. அதனால் மற்றவர்களின் பட்டங்களை எடுத்துவிட்டோம் என்கிறார்கள்.
முதலமைச்சருக்கு பட்டம் இல்லை என்பதால், நான் படித்து வாங்கிய பட்டத்தை எடுப்பதற்கு யார் அனுமதி கொடுத்தார்கள். நல்ல வேளை கல்வெட்டில் ஆட்சியரின் ஐ.ஏ.எஸ் பட்டத்தையாவது விட்டு வைத்தார்கள்.
இப்போதும் ஒன்றும் கெட்டுப் போகவில்லை. முதலமைச்சர் Distance Education Mode-ல் ஒரு பட்டப்படிப்பை நிறைவு செய்யலாம். அடுத்த முறையாவது கல்வெட்டில் எனது MBBS பட்டம் தப்பிக்கட்டும்.” எனத் தெரிவித்துள்ளார்.

