
தனது ‘Truth Social’ சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்ட டிரம்ப், இந்த செய்தி நிறுவனங்கள் தனது நிர்வாகத்தைப் பற்றி தொடர்ந்து பொய்களையும் கற்பனைக் கதைகளையும் எழுதுவதாகக் குற்றம் சாட்டினார்.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், CNN, MS NOW (முன்னர் MSNBC) மற்றும் Politico ஆகிய ஊடக நிறுவனங்கள் வெள்ளை மாளிகைக்குள் நுழைய உடனடியாகத் தடை விதிப்பதாக அறிவித்துள்ளார்.
டிரம்பின் குற்றச்சாட்டு
தனது ‘Truth Social’ சமூக வலைதளப் பக்கத்தில் நேற்று வெள்ளிக்கிழமை (18) பதிவிட்ட டிரம்ப், இந்த செய்தி நிறுவனங்கள் தனது நிர்வாகத்தைப் பற்றி தொடர்ந்து பொய்களையும் கற்பனைக் கதைகளையும் எழுதுவதாகக் குற்றம் சாட்டினார். இருப்பினும், இதற்கான குறிப்பிட்ட சான்றுகள் எதையும் அவர் வழங்கவில்லை.
மேலும், “ஏனைய செய்தி நிறுவனங்களுக்கும் இந்தத் தடை தொடரும்” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தத் தடையின் செயல்பாடுகள் எவ்வாறு இருக்கும் என்பது குறித்த தெளிவான விளக்கத்தை அவர் அளிக்கவில்லை.
ஊடகங்களின் எதிர்வினை
CNN – இந்த நடவடிக்கையை அமெரிக்க பத்திரிகை சுதந்திரத்தின் மீதான “சட்டவிரோதத் தாக்குதல்” என்று CNN கண்டித்துள்ளது. அமெரிக்க அரசியலமைப்பின் கீழ் அரசாங்கத்தின் இடையூறு இன்றிச் செய்தி சேகரிக்கத் எங்களுக்கு உரிமை உண்டு என்றும், தங்களது நிரூபர்கள் குழுவுக்கு முழு ஆதரவு அளிப்பதாகவும் தெரிவித்துள்ளது.
Politico – வெள்ளை மாளிகை குறித்த தங்களின் நியாயமான செய்தியிடல் தொடரும் என்றும், முதலாவது அரசியலமைப்புத் திருத்த உரிமைகளை (First Amendment rights) உறுதியாகப் பாதுகாப்போம் என்றும் கூறியுள்ளது.
MS NOW – இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டது.
இதேவேளை, மேற்படி அறிவிப்பு வெளியான சிறிது நேரத்துக்குப் பிறகும், Politico மற்றும் CNN நிரூபர்கள் வெள்ளை மாளிகை வளாகத்தில் காணப்பட்டனர். மேலும், துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் (JD Vance) உடன் ஐயோவா (Iowa) பயணத்திலும் CNN குழுவினர் உடன் சென்றனர்.
தொடரும் மோதல்களும் மாற்றங்களும்
ஜனவரி 2025இல் மீண்டும் ஜனாதிபதியாகப் பொறுப்பேற்றதில் இருந்து, டிரம்ப் மற்றும் அவரது அதிகாரிகள் தொடர்ந்தும் ஊடகவியலாளர்களுடன் மோதலில் ஈடுபட்டு வருகின்றனர். தனது இரண்டாவது ஆட்சிக்காலத்தில், பழமைவாத பிளாக்கர்கள் மற்றும் சமூக வலைதள இன்ஃப்ளூயன்சர்களுக்கு வெள்ளை மாளிகை செய்தியாளர் அறையில் டிரம்ப் வாய்ப்பளித்துள்ளார்.
பிப்ரவரி மாதத்தில், நூறாண்டுகளுக்கு மேலாக ‘ஒயிட் ஹவுஸ் கரெஸ்பாண்டண்ட்ஸ் அசோசியேஷன்’ வசமிருந்த ஊடகவியலாளர் குழுவின் கட்டுப்பாட்டை வெள்ளை மாளிகை தன் வசம் எடுத்துக்கொண்டது.
தனது முதல் ஆட்சிக்காலத்தின் போது, CNN நிரூபர் ஜிம் அகோஸ்டாவிற்கு டிரம்ப் தடை விதித்தார். ஆனால், CNN தொடர்ந்த வழக்கைத் தொடர்ந்து அவரது அனுமதி மீண்டும் வழங்கப்பட்டது.
சட்டரீதியான விமர்சனங்கள்
பத்திரிகை சுதந்திர அமைப்புகள் டிரம்பின் இந்த நடவடிக்கையை கடுமையாக விமர்சித்துள்ளன.
கொலம்பியா பல்கலைக்கழகத்தின் நைட் ஃபர்ஸ்ட் அமெண்ட்மென்ட் இன்ஸ்டிடியூட் (Knight First Amendment Institute), ஊடகவியலாளர் குழு என்பது ஒரு பொது மேடை என்பதால் நிரூபர்களின் கருத்துகளின் அடிப்படையில் அவர்களை விலக்கி வைப்பது அரசியலமைப்புக்கு எதிரானது எனக் கூறியுள்ளது.
ரிப்போர்ட்டர்ஸ் கமிட்டி ஃபார் ஃப்ரீடம் ஆஃப் தி பிரஸ் (Reporters Committee for Freedom of the Press) அமைப்பு, இந்தத் தடையை நீதிமன்றங்கள் விரைவில் இரத்து செய்யும் என்று எதிர்பார்ப்பதாகத் தெரிவித்துள்ளது.
மேலும், டிரம்ப் தி வால் ஸ்திரீட் ஜர்னல், தி நியூயார்க் டைம்ஸ் மற்றும் பிபிசி போன்ற பல சர்வதேச செய்தி நிறுவனங்கள் மீது வழக்குத் தொடர்ந்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

