AI செர்னோபில் போன்ற பேரழிவை ஏற்படுத்தும்: AI தந்தை என அழைக்கப்படும் ஜெப்ரி ஹின்டன் எச்சரிக்கை..!!
ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மனிதர்களின் வேலைகளை தான் பறிக்கிறது என பார்த்தால் விரைவில் மனித குலத்தை அழித்துவிடுமோ என்ற சந்தேகத்தை எழுப்பும் வகையில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொருவரும் ஏஐ-இல் உள்ள பாதகங்கள் குறித்து கவலை தெரிவித்து வருகின்றனர்.
செயற்கை நுண்ணறிவு துறையின் முன்னோடியும், AI-ன் தந்தை (god father of AI) என அழைக்கப்படுபவருமான ஜெப்ரி ஹின்டன் தொழில்நுட்ப உலகம் எதிர்கொள்ளவிருக்கும் ஆபத்து குறித்து மிக கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளார். இது ஏஐ ஆய்வில் ஈடுபட்டுள்ள மற்றும் சாதாரண மக்களுக்கும் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஜெப்ரி ஹிண்டன் ஏஐ தொழில்நுட்பம் மனிதர்களின் கட்டுப்பாட்டை மீறி செல்வதற்கு முன்பு பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய மனிதகுலத்திற்கு இன்னும் ஒரு வருட கால அவகாசம் மட்டுமே உள்ளது என குறிப்பிட்டுள்ளார். அதாவது ஏஐ மனிதர்களை மிஞ்சும் அதனை ஓராண்டுக்குள் கட்டுப்படுத்த தவறினால் மனிதர்களுக்கு தான் சிக்கல் என கூறியுள்ளார்.
ஏஐ தொழில்நுட்பம் நாளுக்கு நாள் அசுர வேகத்தில் வளர்ந்து வருவதால், இது மிக விரைவில் மனிதர்களின் கட்டுப்பாட்டை மிஞ்சி செயல்படும் அபாயம் இருப்பதாக ஜெப்ரி ஹின்டன் எச்சரித்துள்ளார். அண்மையில் ஓபன் ஏஐ நிறுவனத்தின் ஏஐ ஏஜெண்டுகள் மனிதர்களின் கட்டுப்பாட்டை மீறி தாங்களாகவே டீமாக செயல்பட்டு Hugging Face தளத்தை ஹேக் செய்தன.
இந்த Hugging Face சம்பவம் ஒரு சிறிய செர்னோபில் விபத்து என கூறும் அவர், அணு ஆயுத தாக்குதல் எப்படி எந்தவொரு கட்டுப்பாட்டுக்கும் அடங்காமல் பேரழிவை ஏற்படுத்துமோ, அதே போன்றதொரு ஆபத்து தானாக இயங்கும் ஏஐ கருவிகளாலும் ஏற்படலாம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தொழில்நுட்ப நிறுவனங்களும் அரசுகளும் இந்த அதிநவீன AI ஆய்வுகளின் போக்கை கட்டுப்படுத்தவும், உரிய பாதுகாப்பு விதிகளை வகுக்கவும் அதிகபட்சம் ஒரு வருட காலம் மட்டுமே எஞ்சியுள்ளது என அவர் கவலை தெரிவித்துள்ளார். இந்த ஓராண்டுக்குள் இதனை செய்ய தவறினால் பின்னாளில் பெரிய செர்னோபிலை சந்திக்க நேரிடும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தற்போதைய அதிவேக ஏஐ வளர்ச்சியானது எதிர்காலத்தில் மனிதகுலத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறக்கூடும் என்பதால், இப்போதே உரிய ஒழுங்குமுறைகளை கொண்டுவர வேண்டும் என்பதே அவர் சொல்ல வரும் கருத்து. கடந்த சில வாரமாகவே அமெரிக்காவில் ஏஐ ஆய்வுகளுக்கு எதிராக குரல்கள் எழ தொடங்கியுள்ளன. குறிப்பாக ஏஐ நிறுவனங்களில் வேலை செய்யும் நபர்களே ஏஐ கட்டுப்பாட்டை மீறி செல்லும் மனித குலத்தை அழிக்கும் என்றெல்லாம் எச்சரிக்க தொடங்கியுள்ளனர்.
முன்னதாக ஓபன் ஏஐ, ஆந்த்ராபிக், மைக்ரோசாப்ட் நிறுவன தலைவர்களும் கூட சூப்பர் ஏஐ ஆய்வுகளை கட்டுப்படுத்த வேண்டும் என கூறி இருந்தனர். ஆனால் டிரம்போ இதற்கு தடை விதிக்க வாய்ப்பே இல்லை என தெரிவித்து வருகிறார்.
