மலையக மாணவர் சமூகத்தின் கல்வி மேம்பாடு மற்றும் மலையகப் பாடசாலைகளின் வள அபிவிருத்தி ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு நிதி திரட்டும் முகமாக, மலையகக் கல்வி அபிவிருத்தி மன்றம் ஆண்டுதோறும் ‘ருக்மணி அம்மாள் ஞாபகார்த்த மென்பந்து கிரிக்கெட் போட்டியை’ நடத்தி வருகிறது.
அந்த வகையில், மலையகக் கல்வி அபிவிருத்தி மன்றத்தின் 20 ஆண்டுகள் நிறைவை முன்னிட்டு, எதிர்வரும் 20 ஆம் திகதி மேற்படி மென்பந்து கிரிக்கெட் சுற்றுப் போட்டியை நடத்துவதற்கு மன்றம் திட்டமிட்டுள்ளதாக அதன் விளையாட்டுத்துறை பொறுப்பாளர் ஜி. சந்திரகுமார் தெரிவித்துள்ளார்.
சர்வதேச மைதானத்தில் களமிறங்கும் இளைஞர்கள்
மலையகக் கல்வி அபிவிருத்தி மன்றத்துக்கு நிதி பங்களிப்பு செய்துவரும் இளைஞர்களின் விளையாட்டுத் துறையை ஊக்குவிப்பதற்கும், அவர்களைச் சர்வதேச மைதானம் ஒன்றில் களமிறங்கச் செய்வதற்கும் என்ற அடிப்படையில் இந்தப் போட்டி தொடர்ச்சியாக நடத்தப்பட்டு வருகிறது.
அவ்வகையில் 20 ஆவது வருடமாகவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ‘ருக்மணி அம்மாள் ஞாபகார்த்தக் கிண்ண கிரிக்கெட் சுற்றுப் போட்டி’, தலைநகரில் அமைந்துள்ள பி. சரவணமுத்து சர்வதேச விளையாட்டரங்கில் இடம்பெறவுள்ளது. இச்சுற்றுப் போட்டியானது ஐ.சி.சி. (ICC) விதிகளுக்கு உட்பட்டதாகவே அமைந்திருக்கும் என்றும் விளையாட்டுத் துறை பொறுப்பாளர் சந்திரகுமார் குறிப்பிட்டுள்ளார்.
40 அணிகளின் பலப்பீட்சை
மன்றத்தின் அங்கத்துவம் பெற்றவர்களை மாத்திரமே உள்ளடக்கியவாறு, அணிக்கு 11 பேர் கொண்ட மொத்தமாக 40 அணிகள் இதில் பங்குபற்றிக் களம் காணவுள்ளன.
இந்தப் போட்டியின் ஊடாகக் கிடைக்கப்பெறும் நிதியானது நேரடியாக மலையக மாணவர்களின் கல்வி மேம்பாட்டுக்காகச் சென்றடையும் என்பதை மலையகக் கல்வி அபிவிருத்தி மன்றம் உத்தரவாதம் அளிக்கிறது.


