டாடா குழுமத்தில் மீண்டும் வெடிக்கும் மோதல்: என்.சந்திரசேகரன் பதவி நீட்டிப்பு சட்டவிரோதம் என கூறும் நோயல் டாடா
டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவராக என். சந்திரசேகரன் மீண்டும் நியமிக்கப்படுவதற்கான தீர்மானத்தின் மீது நடந்த வாக்கெடுப்பு சட்டவிரோதமானது என நோயல் டாடா கூறி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ரத்தன் டாடா மறைந்தது முதலே டாடா குழுமத்தில் மோதலாக தான் உள்ளது. குறிப்பாக நோயல் டாடாவுக்கு டாடா சன்ஸ் தலைவர் சந்திரசேகரனுக்கும் இடையே முரண்பாடுகள் எழுந்த வண்ணமே இருந்தன. இந்நிலையில் டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவராக என். சந்திரசேகரனின் பதவிக்காலம் முடிவடையவிருந்த நிலையில், அவரை மீண்டும் அந்த பதவியில் அமர்த்துவது தொடர்பான வாரிய கூட்டத்தில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

இதில் டாடா டிரஸ்ட்ஸ் தலைவரும், டாடா சன்ஸ் வாரிய இயக்குநர்களில் ஒருவருமான நோயல் டாடா, சந்திரசேகரனின் மறுநியமனத்திற்கு எதிராக வாக்களித்தார். ஆனால் 4-1 என்ற கணக்கில் என்.சந்திரசேகரன் பதவி நீட்டிப்பு தீர்மானம் நிறைவேறியது. இதனால் அடுத்த 5 ஆண்டுகள் அவர் டாடா குழுமத்தில் நீடிப்பது உறுதியாகியுள்ளது. ஆனால் நோயல் டாடா மீண்டும் போர்க்கொடி உயர்த்தியுள்ளார்.
டாடா டிரஸ்ட்ஸ் மற்றும் அதனுடன் இணைந்த டிரஸ்ட்கள் இணைந்து டாடா சன்ஸ் நிறுவனத்தில் சுமார் 66 சதவீத பங்குகளை கட்டுப்படுத்துகின்றன. இதனால் தான் டாடா சன்ஸ் பதவிக்கு இவ்வளவு முக்கியத்துவம் உள்ளது. நோயல் டாடாவின் எதிர்ப்பு இருந்தாலும் , வாரிய உறுப்பினர்களின் பெரும்பான்மை ஆதரவு பெற்றதால் சந்திரசேகரன் பதவி நீட்டிப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்த மறுநியமன நடைமுறைகளும், வாக்கெடுப்பு நடவடிக்கைகளும் முறையாகவும் சட்ட விததிகளின்படியும் நடைபெறவில்லை என நோயல் டாடா மணிகண்ட்ரோல் தளத்திற்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார். இந்த வாக்கெடுப்பு சட்டவிரோதமானது என்றும் கடுமையாக விமர்சித்துள்ளார்.டாடா குழுமத்தின் உச்ச கட்ட அதிகார மையத்தில் நிலவும் இந்த உள்கட்டமைப்பு மற்றும் நிர்வாக ரீதியான கருத்து வேறுபாடுகள் கார்ப்பரேட் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
முன்னதாக டாடா சன்ஸ் தலைவர் என் சந்திரசேகரன் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்வதாக கடந்த மாதம் திடீரென அறிவிப்பு வெளியிட்டார். இதனை அடுத்து டாடா குழும பங்குகள் பெரிய அளவில் சரிவை. கண்டன இந்த சூழலில் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு அவரை டாடா சன்ஸ் தலைவராக பதவி வகிப்பார் என இன்று நடைபெற்ற கூட்டத்தில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டு முடிவெடுக்கப்பட்டது ஆனால் இது சட்டவிரோதமானது என நோயல் டாட்டா கூறி இருப்பதால் டாடா குழுமத்தில் கருத்து வேறுபாடுகள் தீவிரமடைவது உறுதியாகியுள்ளது. இதனை எதிர்த்து அவர் சட்ட நடவடிக்கை எடுக்க போகிறாரா என்ற கெள்வியும் எழுந்துள்ளது.
