டாடா நிறுவன பங்குகள் அதிரடி உயர்வு.. எல்லா புகழும் சந்திரசேகரனுக்கே!
டாடா சன்ஸ் நிறுவனத்தின் சேர்மன் ஆக மீண்டும் என்.சந்திரசேகரன் தொடர வேண்டும் என பல கோரிக்கைகள் டாடா உயர்மட்ட நிர்வாக குழு அதிகாரிகள் தொடர்ந்து கூறிவந்த நிலையில், இன்று நடந்த டாடா சன்ஸ் நிர்வாக கூட்டத்தில் இவரின் பதவிக்காலத்தை 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்க 5 பேர் கொண்ட குழுவில் 4-1 என கணக்கில் வாக்குகள் மூலம் பதவி நீட்டிப்புக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
மேலும் டாடா குழுமத்திற்கு மிகப்பெரிய பிரச்சனையாக இருந்த டாடா சன்ஸ் IPO-வுக்கான பணிகளையும் தொடங்குவதற்கு நடவடிக்கை எடுக்கவும் என்.சந்திரசேகரன் அவசியம் என அறிவிக்கப்பட்டு இப்பதவி உயர்வு கொடுக்கப்பட்டு உள்ளது.

டாடா குழுமம் டாடா சன்ஸ் நிறுவனத்தை பங்குச்சந்தைக்கு கொண்டு வருவதில் இதுவரை தயக்கம் காட்டி வந்த நிலையில்,தற்போது சந்திரசேகரனின் பதவிக்கால நீட்டிப்புடன் பங்குச்சந்தை வருவதற்கான பாதை உருவாகியுள்ளது. இந்த செய்தி வெளியானதை தொடர்ந்து வியாழக்கிழமை வர்த்தகம் முடியும் தருவாயில் டாடா குழும பங்குகள் அதிரடியாக உயர்ந்தன.
டாடா சன்ஸ் நிறுவனத்தில் 2.53% பங்குகளை வைத்துள்ள டாடா கெமிக்கல்ஸ் பங்கு விலை 14% வரை உயர்ந்தது, இதை தொடர்ந்து டாடா இன்வென்ஸ்ட்மென்ட் பங்கு சுமார் 6% உயர்ந்தது. சந்திரசேகரன் முன்பு CEO-வாக பணியாற்றிய TCS பங்கும் 3%-க்கும் மேல் உயர்ந்தது. டாடா மோட்டார்ஸ், டாடா டெக்னாலஜிஸ், டாடா ஸ்டீல் உட்பட பல நிறுவனங்கள் அதிரடியான உயர்வை பதிவு இன்றைய வர்த்தகத்தில் பதிவு செய்தது.
இன்று நடைபெற்ற கூட்டத்தில் என்.சந்திரசேகரன் தொடர்ந்து தலைவராக இருக்க 4-1 வாக்குகள் செய்யப்பட்டு இருந்தாலும், டாடா சன்ஸ் நிறுவனத்தில் 66 சதவீத பங்குகளை வைத்திருக்கும் Sir Ratan Tata Trust மற்றும் Sir Dorabji Tata Trust ஆகியவற்றின் தலைவரான நோயல் டாடா, சந்திரசேகரன் தலைவராகத் தொடர்வது குறித்த முடிவுக்கு எதிராக வாக்களித்துள்ளார்.
இதனால் Sir Ratan Tata Trust மீது இருக்கும் தடைகள் நீக்கப்பட்ட உடன் நடக்கும் வருடாந்திர கூட்டத்தில் சந்திரசேகரனின் மறுநியமனத்தை டாடா டிரஸ்ட் தரப்பு எதிர்க்க வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
சந்திரசேகரன் ஏற்கனவே பதவி நீட்டிப்பு வேண்டாம் எனக் கூறி தனது கடிதத்தைக் கொடுத்துள்ளார், அதை டாடா சன்ஸ் நிர்வாகமும் ஏற்றுக்கொண்டு உள்ளது, புதிய தலைவரைத் தேடும் பணிகளும் துவங்கியுள்ளது. இப்படியிருக்கையில் மீண்டும் அவரை பதவியில் அமரவைப்பது சட்டவிரோதமானது எனக் குறிப்பிட்டு நோயல் டாடா தெரிவித்துள்ளார்.
