Last Updated:
பெங்களூருவில் மனைவியை அழைத்து சென்று தங்கும் விடுதியில் தங்க வைத்து கழுத்து நெரித்து கொன்ற கணவனை, போலீசார் தேடி வருகின்றனர். 6 மாதங்களாகப் பிரிந்து வாழ்ந்த மனைவியுடம் மீண்டும் சேர்ந்த கணவன், கொலைகாரனானது எப்படி?.
பெங்களூருவின் தொட்டபல்லாபுரா நகரில் உள்ள ‘சம்ருத்தி’ ஹோட்டலுக்கு மேலே உள்ள தங்கும் விடுதி ஒன்றில், 23 வயதுடைய இளம்பெண் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். ஹோட்டல் ஊழியர்கள் தகவல் அளித்து சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார் பெண்ணின் உடலை கைப்பற்றி விசாரணையைத் தொடங்கினர். அதில் உயிரிழந்தவர் கௌரிபிதனூர் தாலுகாவில் உள்ள நாகரகெரே கிராமத்தைச் சேர்ந்த வித்யா என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
கணவர் ஆனந்துடன் புதன்கிழமை காலை 11.30 மணிக்கு அறை எடுத்து தங்கிய வித்யா, அன்றிரவு மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். இச்சம்பவத்திற்குப் பிறகு விடுதியில் நள்ளிரவு 1 மணிக்கு மேல் அவரது கணவர் ஆனந்த், அறையைப் பூட்டி விட்டு மாயமாகி உள்ளார். மறுநாள் அறையைத் திறக்கவில்லை என ஆனந்திற்கு கால் செய்தபோது அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது.
அப்போதுதான் விடுதி ஊழியர்களுக்குச் சந்தேகம் ஏற்பட்டு மாற்று சாவியைப் போட்டு அறையைத் திறந்து அதிர்ச்சி அடைந்தனர். இதனையடுத்து வித்யாவின் உடலைக் கைப்பற்றி பிரேதப்பரிசோதனைக்கு அனுப்ப, மற்றொரு அதிர்ச்சியாக மருத்துவர்கள் ஆய்வில் ID card அணியப் பயன்படும் நாடாவைக் கொண்டு கழுத்து நெரித்து, அவர் கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது.
இதனால் வித்யாவை அவரது கணவர் ஆனந்த் கொலை செய்துவிட்டுத் தப்பித்திருப்பது உறுதியாகி உள்ளது. வித்யாவும் ஆனந்தும் சுமார் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு காதலித்துத் திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். இந்தத் தம்பதியினர் தொட்டபல்லாபுராவின் காந்திநகரில் வாடகை வீட்டில் வசித்து வந்தனர். கடந்த ஆறு மாதங்களாக இத்தம்பதியினரிடையே குடும்பத் தகராறு இருந்து வந்ததாக உறவினர்கள் கூறியுள்ளனர்.
சுமார் இரண்டு மாதங்களுக்கு முன்பு, வித்யா தனது கணவரைப் பிரிந்து பெங்களூரில் உள்ள ‘பேயிங் கெஸ்ட்’ -ஆனா தங்கும் விடுதிக்குச் சென்றதாகக் கூறப்படுகிறது. அவர் மாயமானதைத் தொடர்ந்து, ஆனந்த் தொட்டபல்லாபுரா மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். பின்னர் போலீசார் வித்யாவைக் கண்டுபிடித்து, சுமார் 20 நாட்களுக்கு முன்பு தம்பதியினருக்கு counseling வழங்கி அவர்களை மீண்டும் சேர்த்து வைத்ததாக தெரியவந்தது.
அதன்பின்னர் தான் கடந்த புதன்கிழமையன்று ஆனந்த் வித்யாவை அந்தத் தங்கும் விடுதிக்கு அழைத்துச் சென்றார். அங்கு வைத்து கழுத்து நெரித்துக் கொன்று விட்டுத் தப்பித்துள்ளார். இந்நிலையில் தனிப்படை அமைத்து ஆனந்தை தேடி வரும் நிலையில் அவர் பிடிபட்டால் மட்டுமே கொலைக்கான முழு பின்னணியும் தெரியவரும் என போலீஸ் தரப்பில் கூறப்பட்டது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


