Last Updated:
ரூ.100 கோடி மான நஷ்டஈடு வழக்கில், தோனி பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு. அக்டோபர் 9-க்குள் பதிலளிக்க வேண்டும்.
நூறு கோடி ரூபாய் மான நஷ்டஈடு கோரிய வழக்கில், மகேந்திர சிங் தோனியின் வாக்குமூலத்தை வீடியோ பதிவு செய்யக் கோரி முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி சம்பத்குமார் தாக்கல் செய்த வழக்கில், அக்டோபர் 9-ஆம் தேதிக்குள் தோனி பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
கடந்த 2013-ஆம் ஆண்டு நடந்த ஐ.பி.எல். சூதாட்டம் தொடர்பான வழக்கு குறித்த தொலைக்காட்சி விவாதத்தில், தனக்கு எதிராக அவதூறு கருத்துக்கள் கூறியதாக, ஓய்வுபெற்ற ஐ.பி.எஸ். அதிகாரி சம்பத்குமார், தனியார் தொலைக்காட்சிக்கு எதிராக நூறு கோடி ரூபாய் மானநஷ்ட ஈடு கோரி, கிரிக்கெட் வீரர் மகேந்திரசிங் தோனி, 2014-ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கில், தோனியின் வாக்குமூலத்தை பதிவு செய்ய வழக்கறிஞர் ஆணையரை நியமித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், தோனியின் வாக்குமூலத்தை வீடியோ பதிவு செய்யக் கோரி, ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரி சம்பத் குமார் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில், வாக்குமூலப் பதிவை கண்காணிக்க நீதிபதி ஒருவரை நியமிக்க வேண்டும்; வீடியோ பதிவு செய்யப்பட்ட வாக்குமூலத்தை எடிட் செய்யாமல் தனக்கு வழங்க உத்தரவிட வேண்டும்; வாக்குமூலப் பதிவை, ஐந்து நட்சத்திர விடுதி அல்லது தனியார் பங்களாக்களில் நடத்தாமல், நீதிமன்றம் அல்லது அரசு கட்டிடங்களில் நடத்த உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தார்.
இந்த மனு நீதிபதி கோவிந்தராஜன் திலகவதி முன் இன்று விசாரணைக்கு வந்தது. இந்த மனுவுக்கு அக்டோபர் 9-ஆம் தேதிக்குள், மகேந்திர சிங் தோனி பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்தார்.


