Last Updated:
விசா ரத்துக்கான அதிகாரப்பூர்வ காரணத்தை ஐக்கிய அரபு அமீரக அரசு இதுவரை தெரிவிக்கவில்லை
ஐக்கிய அரபு அமீரகம் (UAE) தங்களது நாட்டில் பணியாற்றி வந்த சுமார் 5,000 வங்கதேச தொழிலாளர்களின் விசாக்களை திடீரென ரத்து செய்துள்ளது. விடுமுறையில் தாய்நாடு திரும்பிய ஆயிரக்கணக்கான வங்கதேசத்தினர் மீண்டும் ஐக்கிய அரபு அமீரகத்திற்குத் திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர்.
ஐக்கிய அரபு அமீரகத்தில் சுமார் 12 லட்சம் வங்கதேச நாட்டினர் வசித்து வருகின்றனர். இவர்கள் கட்டுமானம், உற்பத்தி மற்றும் போக்குவரத்துத் துறைகளில் பெருமளவில் பணியாற்றி வருகின்றனர். இந்தியாவுக்கு அடுத்தபடியாக வங்கதேசத்திற்கு அதிக அளவு பணம் அனுப்பப்படும் முதன்மை நாடாக ஐக்கிய அரபு அமீரகம் திகழ்கிறது.
இந்நிலையில், தாய்நாட்டிற்கு விடுமுறையில் சென்ற சுமார் 4,800-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு ஜூலை மாதம் முதல் விசா ரத்து செய்யப்பட்டதற்கான அறிவிப்புகள் எவ்வித முன்னறிவிப்போ அல்லது விளக்கமோ இன்றி அவர்களின் மின்னஞ்சலுக்கு அனுப்பப்பட்டுள்ளன. வழக்கமாக 6 மாதங்களுக்கு மேல் நாட்டிற்கு வெளியே இருந்தால் மட்டுமே விசா ரத்து செய்யப்படும் என்ற விதி உள்ள நிலையில், 2 முதல் 3 மாதங்கள் மட்டுமே ஊரில் இருந்தவர்களின் விசாக்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
விசா ரத்துக்கான அதிகாரப்பூர்வ காரணத்தை ஐக்கிய அரபு அமீரக அரசு இதுவரை தெரிவிக்கவில்லை. இருப்பினும் பின்வரும் காரணங்கள் இதற்குக் கணிப்பாகக் கூறப்படுகின்றன.
மத்திய கிழக்கில் நிலவும் அமைதியின்மை மற்றும் அமெரிக்கா-ஈரான் மோதல்கள் காரணமாகக் கட்டுப்பாடுகள் தீவிரமாக்கப்பட்டுள்ளன. சமூக ஊடகங்களில் உணர்ச்சிப்பூர்வமான, அரசியல் அல்லது பாதுகாப்பு சார்ந்த கருத்துக்களைப் பதிவிடுபவர்கள் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
முன்னதாக பாகிஸ்தான் நாட்டினரின் குற்ற நடவடிக்கைகள் மற்றும் பிச்சையெடுப்பு புகார்கள் காரணமாக அவர்கள் விசாக்களுக்குக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதைப் போல, வங்கதேசத்தினர் மீதும் தணிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
27 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றியவர்கள், வியாபாரம் செய்து வந்தவர்கள் எனப் பலரும் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர். வங்கதேசத்தில் வேலைவாய்ப்பு முகவர்களிடம் அதிக அளவில் கடன் வாங்கி விசா பெற்ற தொழிலாளர்கள், இப்போது வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கின்றனர்.
இந்த விவகாரம் குறித்து வங்கதேச அரசு ஐக்கிய அரபு அமீரக அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. வெளியுறவுத்துறை அமைச்சகம் தூதரக ரீதியாக இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண முயற்சித்து வருவதாகத் தெரிவித்துள்ளது.

