
பொதுப் பாதுகாப்புக் காரணங்களால் லண்டன் காவல்துறை அனுமதி மறுத்ததைத் தொடர்ந்து, முதலமைச்சர் விஜய்யின் சந்திப்பு நிகழ்ச்சி திடீரென ரத்து செய்யப்பட்டு அனைவரும் கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டனர்.
பிரிட்டன் தலைநகர் லண்டனுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள தமிழக முதலமைச்சர் விஜய் தங்கியுள்ள உணவகத்தின் முன்பாகத் திட்டமிடப்பட்டிருந்த சந்திப்பு நிகழ்ச்சி, காவல்துறையின் அனுமதி மறுக்கப்பட்டதைத் தொடர்ந்து திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது.
லண்டனின் புகழ்பெற்ற ‘தி ஷார்ட்’ கட்டட வளாகத்தில் உள்ள உணவகத்தில் அவர் தங்கியிருப்பதை அறிந்த ஏராளமான ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள், அவரை நேரில் சந்திப்பதற்காக அப்பகுதியில் உள்ள வீதிகளில் பெருமளவில் திரண்டனர்.
முதலமைச்சர் தங்கியிருக்கும் உணவகத்தின் அருகே லண்டன் பிரிட்ஜ் ரயில் நிலையம் உள்ளிட்ட முக்கியமான பொதுப் போக்குவரத்து மையங்கள் அமைந்துள்ளதால், மக்கள் கூட்டம் அதிகரிப்பது பொதுப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையும் என லண்டன் பெருநகரக் காவல்துறை தெரிவித்தது.
இதன் காரணமாக அங்கு மக்கள் கூடுவதற்கான அனுமதியை லண்டன் காவல்துறை திட்டவட்டமாக மறுத்துவிட்டது.
இதனைத் தொடர்ந்து, ஒலிபெருக்கி வாயிலாகக் கூட்டத்தினருக்கு அறிவிப்பு வெளியிட்ட முதலமைச்சரின் குழுவினர், காவல்துறையின் பாதுகாப்பு வழிகாட்டுதல்களின்படி சந்திப்புக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதால் பொது அமைதியைக் கருத்தில் கொண்டு அனைவரும் உடனடியாகக் கலைந்து செல்ல வேண்டும் என்றும், மேலும் யாரும் அந்தப் பகுதிக்கு வர வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டனர்.
பல மணி நேரம் காத்திருந்த நிலையில் நிகழ்ச்சி திடீரென ரத்து செய்யப்பட்டதால், அங்கு திரண்டிருந்த ரசிகர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

