உளவு பார்க்க வந்த அமெரிக்க ஆடு MQ-1.. சுட்டு வீழ்த்திய ஈரான்.. ஹார்முஸ் கடலில் மிதக்கும் ட்ரோன்!
அமெரிக்கா ஈரான் மத்தியிலான போர் பதற்றம் தொடர்ந்து அதிகரித்து வரும் வேளையில் அமெரிக்காவின் ஆயுதம் தாங்கிய டிரோன் விமானத்தை ஈரான் சுட்டு வீழ்த்தியுள்ளது. ஹார்முஸ் ஜலசந்தி வழித்தடத்தின் அருகே அமெரிக்காவின் அதிநவீன உளவு பார்க்கும் ஆள்ளில்லா விமானம் மற்றும் ஆயுதம் தாங்கிய MQ-1 ட்ரோன் ஒன்றை சுட்டு வீழ்த்தப்பட்டதாக IRGC எனப்படும் ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.
ஈரானின் ராணுவ திறன் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது, அமெரிக்க விமான தளத்தை குறிவைத்து தாக்கியதில் துவங்கி, போர் விமான சுட்டுவிழ்த்தப்பட்டு தற்போது ஹார்முஸ் ஜலசந்தியின் மேற்குப் பகுதியில் உளவு பார்த்து வந்த அதிநவீன MQ-1 ட்ரோனை சுட்டு வீழ்த்தியுள்ளது.

தஸ்னிம் செய்தி தளத்தில் ஐஆர்ஜிசி படை வெளியிட்ட தகவல்படி திங்கட்கிழமை ஈரான் விமான படையின் அதிநவீன வான் பாதுகாப்பு அமைப்பு முலம் MQ-1 ட்ரோனை சுட்டு வீழ்த்தியுள்ளதாக தெரிவித்துள்ளது.
இதேவேளையில் அமெரிக்க அரசு நீண்ட நாட்களுக்கு பின்பு ஈரான் உடனான போர் மூலம் ஆயுத கையிருப்பில் பாதிப்பு ஏற்பட்டு உள்ளதை வெளிப்படையாக ஒப்புக்கொண்டு உள்ளது.
அமெரிக்க அரசின் கண்காணிப்பு அமைப்பு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ள புதிய அறிக்கை, ஈரானுடனான 7 மாத போரால் அமெரிக்காவின் ஆயுத கையிருப்பில் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. குறிப்பாக, நவீன ஏவுகணைகள் மற்றும் Interceptor ஆயுதங்களின் இருப்பில் கடுமையான சரிவு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
இதற்கிடையில் ஆயுதங்களை மீண்டும் உற்பத்தி செய்து கையிருப்பை நிரப்புவதில் பல சிக்கல்கள் இருப்பதாகவும், ஈரான் போருக்கு முந்தைய இருப்பு நிலையை எட்ட அமெரிக்காவுக்கு குறைந்தது 3 ஆண்டுகள் ஆகலாம் எனவும் இந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.
ஏற்கனவே ஈரான் உடனான போரில் பல போர் விமானங்கள், பைட்டர் ஜெட்களை அமெரிக்கா இழந்த நிலையில் தற்போது அடுத்த முக்கியமான பிரச்சனையாக ஆயுத இருப்பு குறித்த உண்மை வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
அமெரிக்கா ரஷ்யா, வெனிசுலா, ஈரான், காசா என அடுத்தடுத்து போர்களை நடத்தி வரும் வேளையில் ஆயுத பயன்பாடு கடந்த 10 வருடத்தில் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது. இதேவேளையில் ஈரான் மத்திய கிழக்கில் அமெரிக்காவின் பல்வேறு ஆயுத கிடங்குகளை தாக்கியதாகவும் தகவல் வெளியானது.
இதனால் ஆயுத இருப்பில் பெரிய அளவிலான தட்டுப்பாடு உருவாகியிருப்பதாலேயே அமெரிக்க கடந்த 2 மாதங்களாக போரை பேச்சுவார்த்தை வாயிலாகவும், பொருளாதார தடை மூலம் ஈரானை முடக்க முயற்சி செய்யும் திட்டத்தை கையில் எடுத்துள்ளது.
இதேவேளையில் 2 மாதங்களுக்கு முன்பு அமெரிக்காவில் கார் உற்பத்தி அலைகள் முதல் பல்வேறு தொழிற்சாலைகளை தற்காலிகமாகவும், போர் கால அடிப்படையில் ஆயுதம் தயாரிக்கும் தளமாக மாற்றுவதற்கு ஆலோசனை செய்யப்பட்டு வருவதாக தகவல் வெளியானது மூலம் தற்போது ஆயுத தட்டுப்பாடு குறித்த தகவல் உறுதியாகிறது.
