புதின், ஜி ஜின்பிங்-ஐ விடுங்க BRICS மாநாட்டில் மோடி கூடவே இருந்த இந்த நபர் யார்?
தலைநகர் டெல்லியில் கடந்த இரண்டு நாட்களாக பிரிக்ஸ் உச்சிமாநாடு நடந்தது. ரஷ்ய அதிபர் விளாதிமிர் புடின், சீன அதிபர் ஜி ஜின்பிங் மற்றும் பல்வேறு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றனர். இதனால் உலகமே கடந்த இரண்டு நாட்களாக இந்தியாவில் நடக்கும் பிரிக்ஸ் மாநாட்டின் நிகழ்வுகளை தான் உற்று நோக்கி கொண்டிருந்தது.
பிரிக்ஸ் உச்சிமாநாட்டின் போது, பிரதமர் நரேந்திர மோடி, ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோர் ஒரே பிரேமில் இடம்பெற்ற புகைப்படம் இணையத்தில் வைரலானது. அந்த புகைப்படத்தில் உலக தலைவர்களுக்கு பின்னால் நின்று கொண்டிருந்த இளம் இந்திய அதிகாரி ஒருவரும் இணையவாசிகளின் பேசுபொருளாக மாறினார். இவர் யார்? உலக தலைவர்கள் உடனான சந்திப்பின் போது இவர் உடனிருக்க காரணம் என்ன என்பதை பார்க்கலாம்.

இந்த புகைப்படத்தில் இருக்கும் 36 வயதான நபர் இந்திய வெளியுறவு பணி அதிகாரியான சித்தார்த் பாபு. கேரள மாநிலம் கொச்சியை சேர்ந்தவர். இவர் 2008 முதல் 2012 வரை கொச்சியில் உள்ள மார் அத்தனாசியஸ் பொறியியல் கல்லூரியில் மெக்கானிக் பொறியியல் பிரிவில் பட்டம் பெற்றார்.
குடிமைப்பணிக்கு வருவதற்கு முன்பு இவர் ஈ-காமர்ஸ் துறையில் பணியாற்றினார். தனது முதல் சிவில் சர்வீஸ் முயற்சியில் வெற்றி பெறாவிட்டாலும், இரண்டாவது முயற்சியில் அகில இந்திய அளவில் 15ஆவது இடம் பிடித்து இந்திய வெளியுறவு பணியை தேர்ந்தெடுத்தார். இவர் 2017ஆம் ஆண்டு பேட்ச் IFS அதிகாரியாவார்.

டிசம்பர் 2017இல் டெல்லியில் பயிற்சி அதிகாரியாக தனது வெளியுறவு துறை பணியை தொடங்கிய சித்தார்த் பாபு முதன்முறையாக சீனாவுக்கு இந்திய வெளியுறவு துறை அமைச்சக அதிகாரியாக அனுப்பி வைக்கப்பட்டார். 2018 ஆகஸ்ட் முதல் 2022 ஜூலை வரை பெய்ஜிங்கில் உள்ள இந்திய தூதரகத்தில் மூன்றாம் செயலாளராகவும் , பின்னர் இரண்டாம் நிலை செயலாளராகவும் பணியாற்றினார். சீனாவில் பணிபுரிந்த இந்த 4 ஆண்டுகளில் சீன மொழியையும் அந்நாட்டின் அரசியல் மற்றும் இராஜதந்திர சூழலையும் நன்றாக தெரிந்து கொண்டார்.
சீனாவுக்கு பிறகு, 2022 ஆகஸ்ட் முதல் 2024 ஜூன் வரை அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள மான்டரே கவுண்டியில் தூதரக அதிகாரியாக பணியாற்றினார். அப்போது அங்கே மிடில்பரி இன்ஸ்டிடியூட் ஆஃப் இன்டர்நேஷனல் ஸ்டடீஸ் கல்வி நிறுவனத்தில் மொழி பெயர்ப்பு பிரிவில் முதுகலை பட்டம் பெற்றார்.
2024ஆம் ஆண்டு ஜூனில் டெல்லி திரும்பிய அவர், முதலில் ஏழு மாதங்கள் வெளியுறவு அமைச்சகத்தில் இணை செயலாளராக பணியாற்றினார். 2025 ஜனவரி முதல் தற்போது வரை வெளியுறவு அமைச்சகத்தின் கிழக்காசிய பிரிவில் துணை செயலாளராக பணியாற்றி வருகிறார்.
பிரிக்ஸ் மாநாட்டின் போது, சீன அதிபர் ஜி ஜின்பிங் பேசியவற்றை பிரதமர் மோடி புரிந்துகொள்ள உதவியாக இவர் மொழி பெயர்ப்பு செய்தார், உயர் மட்ட பேச்சுவார்த்தைகளின் போது இரு நாடுகளுக்கும் இடையே உரையாடல்களை மொழிபெயர்த்து தரும் மிக முக்கிய பணியை இவர் கவனித்து வருகிறார்.
பிரிக்ஸ் உச்சிமாநாடு மட்டுமல்லாமல், கடந்த ஜனவரி மாதம் இந்தியாவின் 77ஆவது குடியரசு தின விழாவின் போதும் இவர் பிரதமர் மோடிக்கு அருகில் விஐபி மேடையில் காணப்பட்டார். அப்பொழுது பிரதமர் மோடிக்கும் ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயனுக்கும் இடையேயான உரையாடலை இவர் மொழிபெயர்த்து உதவினார்.

