ஒரே மொபைல் எண்.. ரூ.113 கோடி இழப்பு: தமிழ்நாடு RTO-வில் நடந்த நூதன மோசடி அம்பலம்..!!
தமிழ்நாட்டில் வாகனங்களுக்கான விஐபி நம்பர் மற்றும் ஃபேன்சி எண்களை ஒதுக்கீடு செய்வதில் மாபெரும் முறைகேடுகள் நடந்துள்ளதாக இந்தியாவின் தலைமை கணக்கு தணிக்கையாளர் எனப்படும் சிஏஜி (CAG) அறிக்கையில் தெரிய வந்துள்ளது. இந்த முறைகேடுகளுக்கு ஆர்டிஓ பதிவில் ஒரே மொபைல் எண் 2000க்கும் அதிகமான முறை பயன்படுத்தப்பட்டுள்ளது அம்பலமாகியுள்ளது.
2024, மார்ச் உடன் முடிந்த நிதி ஆண்டிற்கான மாநில வருவாய் குறித்த சிஏஜி அறிக்கை செப்டம்பர் 8 அன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில் தமிழ்நாட்டில் வாகனங்களுக்கான நம்பர்களை பெறுவதில் நடந்த மிகப்பெரிய மோசடி அம்பலமாகியுள்ளது. VAHAN தரவுத்தளத்தின்படி, 2019-20 முதல் 2023-24 வரையிலான காலகட்டத்தில் 6.75 லட்சம் ஃபேன்சி எண்களை ஒதுக்கீடு செய்ய மொத்தம் 4.16 லட்சம் தனிப்பட்ட மொபைல் எண்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

இதில் 53,000 மொபைல் எண்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட முறை பயன்படுத்தப்பட்டு மொத்தம் 3.12 லட்சம் ஃபேன்சி எண்கள் பெறப்பட்டுள்ளன. ஒரே ஒரு மொபைல் எண் மட்டும் 2,008 முறை ஃபேன்சி எண்களை பெற பயன்படுத்தப்பட்டுள்ளது. தனிப்பட்ட மொபைல் எண்கள் முறையே 11 முதல் 2,008 முறை வரை மீண்டும் மீண்டும் பயன்படுத்தப்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.
சில தனிநபர்களோ அல்லது முகவர்களோ ஃபேன்சி எண்களை மொத்தமாக வாங்கி பதுக்கி வைத்து, பின்னர் அவற்றை அதிக விலைக்கு விநியோகம் செய்கிறார்கள் என்ற சந்தேகத்தை இது எழுப்பியுள்ளதாக சிஏஜி குறிப்பிட்டுள்ளது. இதனால் சாதாரண மக்களுக்கு ஃபேன்சி எண்கள் கிடைப்பதில் வெளிப்படைத்தன்மை இல்லாமல் போய்விடுகிறது என்றும் சுட்டிக்காட்டியுள்ளது.ஃபேன்சி எண்களுக்காக வசூலிக்கப்பட்ட கட்டணங்களில் பெரும் முரண்பாடுகள் இருப்பதாகவும், இதனால் அரசுக்கு 133.15 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் சிஏஜி தெரிவிக்கிறது.
வெவ்வேறு வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் ஒரே ஃபேன்சி எண்ணுக்கு முற்றிலும் மாறுபட்ட கட்டணங்கள் வசூலிக்கப்பட்டுள்ள வினோதமும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அதிலும் 0007 என்ற எண் 1,203 வாகனங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆனால் இதற்காக வசூலிக்கப்பட்ட கட்டணம் 2,000 முதல் 2 லட்சம் வரை வேறுபட்டுள்ளது. துறையூர் ஆர்டிஓவில் இந்த எண்ணிற்கு 2000 ரூபாய் வசூல் செய்யப்பட்டுள்ளது ஆனால் சென்னை ஆர்டிஓவில் 2 லட்சம் ரூபாய் பெறப்பட்டுள்ளது.
ஒதுக்கீடு செய்யப்படாத 77,028 ரிசர்வ் செய்யப்பட்ட ஃபேன்சி எண்களில், 43,799 எண்கள் வாகன் போர்ட்டலிலும் பதிவேற்றப்படவில்லை, RTO அலுவலகங்களின் அறிவிப்பு பலகைகளிலும் காட்சிப்படுத்தப்படவில்லை. எனசே வாகனங்களை உரிய காலத்தில் பதிவு செய்வதை உறுதி செய்யவும், ஃபேன்சி எண்களின் ஒதுக்கீட்டில் வெளிப்படைத்தன்மையை கொண்டுவரவும் கடுமையான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும் என்று போக்குவரத்து துறைக்கு சிஏஜி பரிந்துரைத்துள்ளது.
இந்த விவகாரம் குறித்து அரசு அளித்துள்ள பதிலில் வாகன் போர்ட்டலில் ஃபேன்சி எண்களை ஒதுக்கீடு செய்வது ஆதார் அங்கீகாரத்தின் அடிப்படையில்தான் செயல்படுகிறது என்றும், ஒரே மொபைல் எண் மூலம் பல எண்களை பெறும் முறை தற்போது நிறுத்தப்பட்டுவிட்டதாகவும் தெரிவித்துள்ளது.
இந்த முறைகேடுகளை தவிர்க்கும் பொருட்டு, தமிழ்நாடு மோட்டார் வாகன விதிகள், 1989இல் திருத்தம் கொண்டுவரப்பட்டு, இணையவழி ஏல முறை மற்றும் ஃபேன்சி எண்களுக்கான கட்டணங்களை மாற்றியமைப்பது குறித்து அரசு தரப்பில் வரைவுத் திருத்தம் வெளியிடப்பட்டுள்ளது. விரைவில் சட்டமாக கொண்டுவரப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

