கடவுளுக்கு காப்பீடு: மும்பையில் விநாயகர் சதுர்த்தி.. ரூ.703 கோடி இன்சூரன்ஸ் பெற்ற கணபதி..!!
இந்தியா முழுவதும் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட்டாலும் மகாராஷ்ட்ரா மாநிலம் மும்பை தான் இந்த பண்டிகைக்கு மிகவும் பெயர் பெற்றது. விநாயகர் சதுர்த்தி என்றாலே மும்பையே திருவிழா கோலம் பூண்டுவிடும். பிரம்மாண்டமான வித்தியாசமான பல கணபதி சிலைகளை நாம் மும்பையில் காண முடியும்.
விநாயகர் சதுர்த்தியான இன்று தொடங்கி கணபதி சிலைகள் கரைக்கப்படும் நாள் வரை அனைத்து கணபதி பந்தல்களிலும் கூட்டம் அலைமோதும், அப்படி மும்பையில் வைக்கப்பட்டுள்ள ஒரு கணபதி சிலைக்கு 703 கோடி ரூபாய்க்கு இன்சூரன்ஸ் அதாவது காப்பீடு செய்யப்பட்டுள்ளது.

மும்பையின் மிகவும் செல்வாக்குமிக்க மற்றும் பணக்கார கணபதி பந்தல்களில் ஒன்று ஜிஎஸ்பி சேவா மண்டல் (GSB Seva Mandal). இதற்கு 703.27 கோடி ரூபாய்க்கு காப்பீடு பாதுகாப்பை பெற்றுள்ளது. கடந்த ஆண்டு இந்த காப்பீட்டுத் தொகை 474 கோடி ரூபாயாக மட்டுமே இருந்தது. இந்த ஆண்டு அதனை அதிகரித்துள்ளனர்.
மும்பை கிங்ஸ் சர்க்கிள் பகுதியில் அமைந்துள்ள இந்த மண்டலம் தனது 72-வது ஆண்டு விநாயகர் சதுர்த்தியை கொண்டாடுகிறது. இந்த திருவிழாவின் சிறப்பம்சமாக, மகா கணபதி விக்கிரமானது 66 கிலோவிற்கும் அதிகமான தங்கம் மற்றும் 335 கிலோவிற்கும் அதிகமான வெள்ளி ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இது தவிர, விலைமதிப்பற்ற பல ரத்தின கற்களும் இந்த அலங்காரத்தில் பயன்படுத்தப்பட உள்ளது. இந்த தங்கமும் வெள்ளியும் பக்தர்களாலும், தன்னார்வலர்களாலும் காணிக்கையாக வழங்கப்பட்டவை.
இந்த காப்பீட்டு தொகையானது பக்தர்கள், தன்னார்வலர்கள், தங்க-வெள்ளி ஆபரணங்கள் மற்றும் மதிப்புமிக்க இதர சொத்துகளின் பாதுகாப்பிற்காக போடப்படுகிறது. எதிர்பாரா விபத்துகளான தீ விபத்து, கூட்ட நெரிசல், திருட்டு போன்ற நிகழ்வுகளில் இருந்து பக்தர்கள் மற்றும் கடவுளுக்கு அணிவிக்கப்பட்டுள்ள ஆபரணங்களுக்கு பிரச்சினை ஏற்படும் போது அதனை பாதுகாக்க இந்த காப்பீடு தொகை உதவும். தங்கம் உள்ளிட்டவற்றை கொண்டு வரும் போது அல்லது கொண்டு செல்லும் போது அவை களவாடப் பட்டாலோ அல்லது சேதமடைந்தாலோ அதற்கான நிதி பாதுகாப்பாக இது அமையும்.
இந்த பந்தலில் கணபதியை வழிபட ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். இந்த 5 நாட்களும் இங்கே கொண்டாட்டமாக இருக்கும். இந்த 5 நாளும் அன்னதானமும் வழங்கப்படுகிறது. வேத மரபுகள் மற்றும் சாஸ்திரங்களின்படி பல்வேறு சிறப்பு வழிபாடுகளும் பிரார்த்தனைகளும் நடத்தப்படும். இதனால் கூட்ட நெரிசல் ஏற்படும் வாய்ப்புள்ளது.
எனவே தான் பிரச்சினைகளை தவிர்க்க காப்பீடு எடுத்துள்ளனர். ஏதேனும் அசம்பாவிதம் நடந்தால் உடனே 703 கோடி ரூபாய் காப்பீடு கிடைக்குமா என்றால் இல்லை. அந்த நிகழ்வின் தன்மை அதனால் ஏற்பட்ட சேதம் அல்லது இழப்பு ஆகியவற்றுக்கு ஏற்ப கணக்கிட்டு காப்பீடு தொகை என்பது வழங்கப்படும்.

