டி.கே.பி.கபில
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக, ‘FitsAir’ விமான நிறுவனம் தனது கொழும்பு – டுபாய் இடையிலான விமான சேவைகளைத் தற்காலிகமாக நிறுத்திவைத்துள்ளது.
இந்த விமான சேவை இடைநிறுத்தம் கடந்த செப்டம்பர் 6 ஆம் திகதி முதல் அமுலுக்கு வந்துள்ளதாக இந்நிறுவனம் அறிவித்துள்ளது. பிராந்தியத்தின் தற்போதைய நிலவரங்களை அது தொடர்ந்து கண்காணித்து வருவதுடன், அந்தச் சூழல் தங்களது விமான இயக்கங்களை எந்தளவுக்குப் பாதிக்கின்றது என்பதையும் மதிப்பீடு செய்து வருகிறது.
தற்போதைய திட்டமிடலின்படி, எதிர்வரும் நவம்பர் 19 ஆம் திகதி முதல் கொழும்பு – டுபாய் விமான சேவைகளை மீண்டும் ஆரம்பிக்க ‘FitsAir’ திட்டமிட்டுள்ளது. எனினும், அன்றைய காலகட்டத்தில் நிலவும் பாதுகாப்பு நிலவரங்கள் மற்றும் சூழல் மாற்றங்களைப் பொறுத்தே இது முழுமையாகத் தீர்மானிக்கப்படும் என்றும் நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.
இந்தத் தற்காலிக விமான சேவை நிறுத்தத்தால் பயணிகளுக்கு ஏற்பட்ட சிரமங்களுக்கும் இடையூறுகளுக்கும் ‘FitsAir’ தனது வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்வதுடன், இந்த அவசரக் காலப் பகுதியில் பயணிகள் காட்டிய பொறுமைக்கும் ஒத்துழைப்புக்கும் தனது நன்றியையும் தெரிவித்துக் கொண்டுள்ளது.


