யாழ்ப்பாணத்தில் குடும்பஸ்தர் ஒருவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தின் பிரதான சந்தேகநபர் தலைமறைவாகியுள்ள நிலையில், இச்சம்பவத்துடன் தொடர்புடைய மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த படுகொலை சம்பவம் கடந்த புதன்கிழமை இரவு யாழ்ப்பாணம் – வடமராட்சி, கிராமக்கோடு சந்திக்கு அருகில் இடம்பெற்றது
இதன்போது துன்னாலை பகுதியைச் சேர்ந்த வயது 33 வயதான குடும்பஸ்தர் படுகொலை செய்யப்பட்டிருந்தார்.
சரமாரியாக வெட்டிப் படுகொலை
துன்னாலை பகுதியைச் சேர்ந்த இரு குழுக்களுக்கு இடையே நீண்டகாலமாக பகைமை நீடித்து வந்த நிலையில், மோட்டார் சைக்கிளில் வந்த நால்வர் அடங்கிய குழுவினர் இவரைச் சரமாரியாக வெட்டிப் படுகொலை செய்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாகப் பருத்தித்துறை காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வந்தனர்.
இந்நிலையில், சம்பவத்துடன் தொடர்புடைய மூவர் முல்லைத்தீவில் பதுங்கியிருப்பதாகக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் அங்கு விரைந்த காவல்துறையினர் அவர்களைக் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட மூவரையும் பருத்தித்துறை காவல் நிலையத்தில் தடுத்து வைத்துப் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அத்துடன், தொடர்ந்து தலைமறைவாக உள்ள பிரதான சந்தேகநபரைத் தேடிக் கைது செய்வதற்காகப் காவல்துறையினர் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

