International
oi-Halley Karthik
ஒட்டாவா: கனடாவில் இந்திய பெண் ஒருவர் தனது வீட்டை வாடகைக்கு விட்டிருக்கிறார். அங்கு, வாடகைக்கு இருந்தவர், மாட்டுக்கறி சமைத்திருக்கிறார். இதை இந்திய பெண் தடுத்த நிலையில் தற்போது கனடா போலீசாரால் அவர் கைது செய்யப்பட்டிருக்கிறார். ஆனால், மாட்டுக்கறி பிரச்சனை எல்லாம் எதுவும் கிடையாது என்று அந்நாட்டு செய்தி ஊடகங்கள் தெரிவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கனடாவின் சர்ரே பகுதியில் நில உரிமையாளரான ராஜ் திவானா, தனது வாடகைதாரர் தோட்டத்தில் மாட்டிறைச்சி பார்பிக்யூ கிரில் சமைத்ததை பார்த்து டென்ஷனாகியிருக்கிறார். சுவரில் கறை படிவதாக கூறி.. இதை சமைக்க கூடாது என்று கூறியிருக்கிறார்.

வடகைதாரர் புகார்
இருந்தாலும் வாடகைக்கு இருந்தவர்.. நான் சமைத்தே தீருவேன் என்று பிடிவாதமாக இருந்திருக்கிறார். பொறுத்து பார்த்த ராஜ் திவானா, கிரில்லில் இருந்த உணவை மரக்கட்டையால் தட்டிவிட்டு, தனது இடத்தில் சமைக்க கூடாது கல் வீசி தாக்குதல் நடத்தி மிரட்டியிருக்கிறார். திங்கிற சோத்துல மண் அள்ளி போடுறியே.. என்று டென்ஷனான வாடகைக்கு இருந்தவர், இது குறித்து போலீசில் புகார் அளித்திருக்கிறார். சமயலை தடுத்தது, கல் வீசி தன்னை தாக்கியது தொடர்பான வீடியோ ஆதாரத்தை சமர்ப்பித்திருக்கிறார்.
பீஃப் சமைத்தவர் மீது தாக்குதல்
இது மட்டும் கிடையாது.. வாடகை கொடுத்திருந்தாலும், வீட்டின் பூட்டுகளை மாற்றியதோடு, வீட்டின் முன் கதவையே முழுமையாக கழற்றி எடுத்து சென்றுவிட்டதாகவும் வாடகைக்கு இருந்தவர் குற்றம்சாட்டினார். மேலும் ஆட்களை அனுப்பி தன்னை மிரட்ட முயன்றதாகவும் அவர் போலீசில் புகார் அளித்திருந்தார். புகாரை தொடர்ந்து காவல்துறை விசாரணையில் இறங்கியது. மறுபுறம் ராஜ் திவானாவின் வீடியோ சோஷியல் மீடீயாக்களில் பரவலாக ஷேராகியிருந்தது.
போலீசார் அதிரடி ஆக்ஷன்
இதையடுத்து இன்று ராஜ் திவானா என்பவரை உள்ளூர் போலீசார் கைது செய்திருக்கின்றனர். இந்த விவகாரம் மாட்டிறைச்சி சம்பந்தப்பட்டது கிடையாது என்றும் சில தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போதுவரை ராஜ் திவானா போலீசாரின் விசாரணை வளையத்தில் மட்டும்தான் இருக்கிறார். நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. குற்றம் நிரூபிக்கப்பட்டால் மட்டுமே அவருக்கான தண்டனை என்ன என்பது குறித்து தெரிய வரும்.
உண்மை என்ன?
இதற்கிடையில் பெரும்பாலானோர், கனடாவில் நடந்தது மாட்டுக்கறி பிரச்சனை கிடையாது, வீட்டு ஓனருக்கும் வாடகைக்கு இருப்பவருக்கும் இடையில் நடந்த பிரச்சனை என்று கூறி வருகின்றனர். கனடாவில் பரவலாக எல்லோரும் மாட்டுக்கறி சாப்பிடுகிறார்கள். எனவே இதை வைத்தெல்லாம் பஞ்சாயத்தை கிளப்பியிருக்க வாய்ப்பு இல்லை என்றும், சாதாரண பிரச்சனைதான் இது என்றும் கூறுகின்றனர்.
Fact Check நிறுவனமான BOOM LIVE, இந்த சம்பவம் குறித்து கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் உள்ள சர்ரே போலீஸ் சர்வீஸ் ஊடக தொடர்பு அதிகாரி இயன் மெக்டொனால்டை தொடர்பு கொண்டு விஷயம் குறித்து விசாரித்திருக்கிறது. விசாரணையில், இந்த சம்பவம் முழுக்க முழுக்க ராஜ் திவானாவுக்கும், வாடகைக்கு குடியிருந்தவருக்கும் இடையே முன்பிருந்தே நீடித்து வந்த தனிப்பட்ட பிரச்சனைதான் என்று தெரிவித்திருப்பதாக கூறப்படுகிறது.

