குழந்தைகளை நாய் தாக்குதலில் இருந்து காப்பாற்ற உள்ளாட்சி அமைப்புகள் “குழந்தைகளுக்கு ஆபத்தை விளைவிக்கக்கூடிய தெருநாய் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளை” அடையாளம் காண வேண்டும் என்று மலேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் (சஹாகாம்) குழந்தைகள் நல ஆணையர்கள் தெரிவித்துள்ளனர். பள்ளிகள், மழலையர் பள்ளிகள், விளையாட்டு மைதானங்கள், மக்கள் குடியிருப்புத் திட்டங்கள் (PPR) மற்றும் அடுக்குமாடி குடியிருப்புப் பகுதிகள், பள்ளிக்குச் செல்லும் பாதைகள், ஆக்ரோஷமான அல்லது சுற்றித்திரியும் நாய்கள் குறித்து அடிக்கடி புகார்கள் வரும் இடங்கள் ஆகியவற்றை உள்ளட்டக்கி இருக்க வேண்டும் என்று ஆணையர்கள் கூறினர்.
வீட்டுவசதி, உள்ளாட்சித் துறை அமைச்சகம், மாநில அரசுகள், உள்ளாட்சி அமைப்புகள், கால்நடைச் சேவைகள் துறை (DVS) ஆகியவை இந்தப் பிரச்சினையைக் கையாள தெளிவான மற்றும் ஆபத்து-சார்ந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர்கள் தங்கள் அறிக்கையில் வலியுறுத்தினர். வீடுகள், பள்ளிகளுக்கு அருகில் ஆக்ரோஷமான நாய்க் கூட்டங்கள் தொடர்பான புகார்களுக்கு முன்னுரிமை அளித்தல், புகார்களை அடுத்தகட்ட நடவடிக்கைக்குக் கொண்டு செல்வதற்கும் தொடர் நடவடிக்கை எடுப்பதற்கும் நிலையான நடைமுறைகளை உருவாக்குதல், குழந்தைகள் மீதான விலங்குத் தாக்குதல்கள் குறித்த தேசியத் தரவுகளை மேம்படுத்துதல் ஆகியவை இதில் அடங்க வேண்டும்.
கடந்த செப்டம்பர் 5 அன்று காலை ஜோகூரில் ஐந்து தெருநாய்களால் இரண்டு வயது சிறுமி தாக்கப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தலையிலும் முகத்திலும் பலத்த காயமடைந்த அந்தச் சிறுமி, மாவட்ட மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு, பின்னர் ஜோகூர் பாருவில் உள்ள சுல்தானா அமினா மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக மாற்றப்பட்டார்.
2023-ஆம் ஆண்டு முதல் சுற்றித்திரியும் அல்லது தெருநாய்களால் குழந்தைகள் தாக்கப்பட்ட அல்லது கடிக்கப்பட்ட பல சம்பவங்களைச் சுட்டிக்காட்டிய குழந்தைகள் நல ஆணையர்கள், இந்தச் சம்பவத்தை ஒரு தனிப்பட்ட நிகழ்வாகக் கருதக்கூடாது என்று கூறினர்.
நாய்களிடமிருந்து தப்பிக்க முயன்றபோது குழந்தைகள் காயமடைந்த சம்பவங்களையும் அவர்கள் சுட்டிக்காட்டினர். 2024ஆம் ஆண்டில் சித்தியாவான் (Sitiawan) பகுதியில், நாய் துரத்தியதால் ஒரு சிறுவன் வாகனப் போக்குவரத்துக்குள் ஓடிச் சென்று, காரால் மோதப்படும் அபாயத்திற்கு உள்ளானான். முன்கூட்டியே அறியக்கூடிய மற்றும் தடுக்கக்கூடிய ஆபத்துகளிலிருந்து பாதுகாப்பான சூழலில் வாழவும், விளையாடவும், நடக்கவும் மற்றும் பள்ளிக்குச் செல்லவும் குழந்தைகளுக்கு உரிமை உண்டு என்று அவர்கள் கூறினர். மேலும், சிறிய உடல்வாகு மற்றும் தங்களைத் தற்காத்துக்கொள்ளும் திறன் குறைவாக இருப்பதால் சிறு குழந்தைகள் குறிப்பாக அதிக ஆபத்துக்குள்ளாகிறார்கள் என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.
ஆக்ரோஷமான விலங்குகளைத் தவிர்ப்பது மற்றும் கடித்த பிறகு உடனடியாக மருத்துவ உதவியை நாடுவது குறித்த வழிகாட்டுதல்கள் உட்பட, குழந்தைகள், பெற்றோர்கள், பள்ளிகள் மற்றும் குழந்தைப் பராமரிப்பு நிலையங்களுக்குப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு மற்றும் கல்வி வழங்குவது முக்கியம் என்று அவர்கள் வலியுறுத்தினர். இருப்பினும், இத்தகைய விழிப்புணர்வு நடவடிக்கைகள், பொதுப் பாதுகாப்பு தொடர்பான ஒரு அறியப்பட்ட ஆபத்தைக் கையாள்வதற்கான பொறுப்பை அதிகாரிகளிடமிருந்து குழந்தைகளின் மீது சுமத்துவதாக அமைந்துவிடக் கூடாது. சுற்றித் திரியும் நாய்களால் ஏற்படக்கூடிய, முன்கூட்டியே அறியக்கூடிய ஆபத்தின் காரணமாக, ஒரு சிறு குழந்தை தனது வீட்டிற்கு வெளியே விளையாடுவதையோ, விளையாட்டு மைதானத்தைப் பயன்படுத்துவதையோ அல்லது பள்ளிக்குச் செல்வதையோ தவிர்க்க வேண்டிய நிலை வரக்கூடாது என்று ஆணையர்கள் கூறினர்.
The post குழந்தைகள் பாதிக்கப்படுவதற்கு முன்பு தெருநாய்கள் அதிகம் நடமாடும் இடங்களை அடையாளம் காண்பீர்: சுஹாகாம் appeared first on Makkal Osai – மக்கள் ஓசை.

