Cricket
oi-Yogeshwaran Moorthi
சென்னை: அமெரிக்காவில் இருந்து சிஎஸ்கே ஜாம்பவான் தோனி சென்னை வந்த பின், அந்த அணியின் அடுத்த பயிற்சியாளர் குறித்த இறுதி முடிவு எடுக்கப்படும் என்று தெரிய வந்துள்ளது. வெளிநாட்டுஇ பயிற்சியாளர்கள் பரிந்துரை பட்டியலில் இருந்த யாரும் தோனியின் சிந்தனையில் இல்லை என்றும், ஹர்திக் பாண்டியா டிரேட் தொடர்பாக செப்டம்பர் 22ஆம் தேதிக்கு பின் முடிவு எடுக்கப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
கடந்த சில வாரங்களாகவே சிஎஸ்கே அணி தொடர்பாக பல்வேறு தகவல்கள் வெளியாகி வந்தது. குறிப்பாக சிஎஸ்கே அணி நிர்வாகத்திடம் இருந்து தோனி 25% பங்குகளை வாங்க விரும்பியதாகவும், இதனால் இரு தரப்புக்கும் இடையில் மோதல் வெடித்ததாகவும் சொல்லப்பட்டது. மறுபக்கம் சிவம் துபே, கலீல் அஹ்மத் ஆகியோரை கொடுத்துவிட்டு ஹர்திக் பாண்டியாவை டிரேட் மூலம் பெற சிஎஸ்கே விரும்புவதாக பேசப்பட்டது.

அதுமட்டுமல்லாமல் இங்கிலாந்து முன்னாள் கேப்டன் இயன் மோர்கன் சிஎஸ்கே அணியின் பயிற்சியாளராக செயல்பட ரூ.18 கோடி ஊதியம் கேட்டு டிமாண்ட் வைத்ததாகவும் சொல்லப்பட்டது. இந்த நிலையில் சிஎஸ்கே அணி தொடர்பாக புதிய தகவல் கிடைத்துள்ளது. அதன்படி தோனிக்கும் சிஎஸ்கே நிர்வாகத்திற்கும் இடையில் எந்த மோதலும் இல்லை.
தற்போது தோனி அமெரிக்காவில் முகாமிட்டிருக்கிறார். செப்டம்பர் 22ஆம் தேதி தான் அமெரிக்காவில் இருந்து நாடு திரும்ப இருக்கிறார். அதேபோல் சிஎஸ்கே அணியின் அடுத்த பயிற்சியாளரை தேர்வு செய்யும் பொறுப்பை தோனி ஏற்றுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது. முதலில் சிஎஸ்கே அணி வெளிநாட்டு பயிற்சியாளர்கள் தொடர்பாக ஒரு பரிந்துரை பட்டியல் வைத்திருந்திருக்கிறது.
ஆனால் அந்த பட்டியலில் இருந்த ஒருவர் வேறொரு அணியுடன் பேசி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் சிஎஸ்கே நிர்வாகம் இந்திய பயிற்சியாளரை நியமிக்க முடிவு எடுத்து தேடுதலை தொடங்கி இருக்கிறது. ஆனால் தோனியின் முடிவே இறுதியானது. அதேபோல் சிஎஸ்கே அணி சில டிரேட் ஒப்பந்தங்கள் தொடர்பான ஆலோசனைகளையும் செப்டம்பர் 22க்கு பின் செய்ய உள்ளது.
இதனால் சிஎஸ்கே அணி நிர்வாகத்தின் முக்கிய முடிவுகள் எடுக்கும் நபராக தோனி மாறியுள்ளார். அதேபோல் தோனிக்கு ஏற்கனவே சிஎஸ்கே அணியின் ஷேர்கள் ஒதுக்கப்பட்டிருக்கின்றன. 55% பங்குகளை ஸ்ரீனிவாசன் தரப்பு வைத்திருந்தாலும், மீதமுள்ள பங்குகளை சிஎஸ்கே நிர்வாகம் பொதுவெளியில் வெளியிட்டிருப்பது அனைவருக்கும் தெரிந்ததுதான். அதில் சுமார் ஒரு லட்சம் ஷேர்களை தோனி வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

