
தாவூதி போரா சமூகத்தின் 60 மில்லியன் ரூபாய் நிதிப் பங்களிப்புடன் நவீனமயப்படுத்தப்பட்ட பம்பலப்பிட்டி ரயில் நிலையம் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவினால் திறந்து வைக்கப்பட்டது.
‘தூய்மையான இலங்கை’ திட்டத்துடன் இணைந்து நடைமுறைப்படுத்தப்படும் ‘கனவு இலக்கு’ தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் புனரமைக்கப்பட்ட பம்பலப்பிட்டி ரயில் நிலையம் மக்கள் பாவனைக்காக உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் தாவூதி போரா சமூகத்தின் 60 மில்லியன் ரூபாய் நிதிப் பங்களிப்புடன், அரச மற்றும் தனியார் துறைகளின் கூட்டிணைப்பின் கீழ் ,இந்த நவீனமயமாக்கல் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.
பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தலைமையில் நடைபெற்ற விசேட நிகழ்வின் போதே, இந்நிலையம் மீளத் திறந்து வைக்கப்பட்டது.
இவ்வாண்டு மார்ச் மாதம் 19ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட புனரமைப்புப் பணிகள், 05 மாத காலத்துக்குள் முழுமையாக நிறைவு செய்யப்பட்டுள்ளன.
இதன்கீழ் ரயில் நிலையத்தின் பிரதான கட்டடம், முதலாம் மற்றும் இரண்டாம் இலக்க நடைமேடைகள், நவீன சுகாதார வசதிகள், மின்சாரம் மற்றும் நீர் விநியோகக் கட்டமைப்புகள் என்பன தரமுயர்த்தப்பட்டுள்ளதுடன், சிசிரிவி கண்காணிப்பு முறைமைகளும் நிறுவப்பட்டுள்ளன.
மேலும், பிரதான வீதியையும் ரயில் வீதியையும் இணைக்கும் புதிய பாதசாரி மேம்பாலம் ஒன்று நிர்மாணிக்கப்பட்டுள்ளதுடன், நிலையத்தின் ஏனைய உட்கட்டமைப்பு வசதிகளும் புனரமைக்கப்பட்டுள்ளன. நாடளாவிய ரீதியில் உள்ள 100 ரயில் நிலையங்களை நவீனமயமாக்குவதை இலக்காகக் கொண்டே ‘கனவு இலக்கு’ தேசிய திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

