கோலாலம்பூர்:
சிறைச்சாலை கதவுகள் மூடப்படுவது ஒருவரின் வாழ்க்கையின் இறுதிப் புள்ளி அல்ல; மாறாக, அது கடந்தகாலத் தவறுகளைத் திருத்திக் கொண்டு புதிய வாழ்க்கையைத் தொடங்குவதற்கான ஒரு வாய்ப்பாகும்.
இதனடிப்படையில், சமூகப் பாதுகாப்பு அமைப்பான ‘பெர்க்கேசொ’ (PERKESO), சிறைத்துறையுடன் இணைந்து நடத்திய ‘MYFutureJobs’ சிறப்பு வேலைவாய்ப்புத் திட்டத்தின் மூலம், காஜாங் சிறையில் உள்ள கைதிகளுக்கு வேலைவாய்ப்புகளை வழங்கிப் புதிய வாழ்க்கையைத் தொடங்குவதற்கு வழிவகை செய்துள்ளது.
போர்ட் கிள்ளானைச் சேர்ந்த 37 வயதான ‘குமார்’ என்ற காஜாங் சிறைக் கைதி, வரும் செப்டம்பர் 23-ஆம் தேதி விடுதலையாகவுள்ள நிலையில், இன்றைய நேர்காணல் முகாமில் பங்கேற்றுத் தனக்கான வேலை வாய்ப்பைப் பெற்றுள்ளார்.
மூன்று பிள்ளைகளின் தந்தையான குமார் இது குறித்துக் கூறுகையில்:”நா ன் முன்பு சிங்கப்பூரில் உணவகத் துறையில் (F&B) பார் கேப்டனாகப் பணிபுரிந்தேன். விபத்து காரணமாக அந்த வேலையை விட்டுவிட்டு மலேசியா திரும்பினேன். இன்று எனது ஆர்வத்தின் காரணமாக மீண்டும் உணவகத் துறை மற்றும் இதர பணிகளுக்கு விண்ணப்பித்துள்ளேன்.
பழைய தவறுகளையும் பழைய நண்பர்களையும் மீண்டும் சந்திக்கக் கூடாது என்பதற்காகக் கிள்ளானுக்கு வெளியே உள்ள பந்திங் மற்றும் நெகிரி செம்பிலானில் உள்ள நீலாய் ஆகிய இடங்களில் வேலை கேட்டுள்ளேன். இன்று எனக்குப் பொதுப் பணியாளர் மற்றும் லாஜிஸ்டிக்ஸ் துறையில் வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது,” என்று நம்பிக்கையுடன் தெரிவித்தார்.
மேலும், சிறையிலிருந்து வெளிவரும் முன்னாள் கைதிகளிடம் பணமோ அல்லது வாகன வசதியோ இல்லாத சூழலில், முதலாளிகளே நேரடியாகச் சிறைக்கு வந்து நேர்காணல் நடத்தி, உணவு மற்றும் தங்குமிட வசதிகளையும் வழங்குவது அவர்களுக்கு மிகப்பெரிய உதவியாக இருக்கும் என்றும், இத்திட்டம் தொடர வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
இவ்வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்ற துப்புரவு சேவை நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் பென்னி சாய் கூறுகையில், கைதிகளிடம் சிறப்பான திறமைகள் இருப்பதை நேர்காணலின் போது உணர முடிந்ததாகத் தெரிவித்தார்.
வெளிநாட்டுத் தொழிலாளர்களைச் சார்ந்திருப்பத்தைக் குறைத்து, நாட்டிலுள்ள மனிதவளத்தைப் பயன்படுத்துவதற்கும், முன்னாள் கைதிகள் சமூகத்தில் மறுவாழ்வு பெறுவதற்கும் நிறுவனங்களின் இந்த சமூகப் பொறுப்புணர்வு (CSR) மிக முக்கியமானது என்றும் அவர் குறிப்பிட்டார்.



