International
oi-Halley Karthik
தெஹ்ரான்: தங்கள் நாட்டு போர்க்கப்பல்கள் மீது ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்த முயன்றதாக கூறி, ஈரானின் 5 எண்ணெய் டேங்கர் கப்பல்களை தாக்கி அழித்திருக்கிறது அமெரிக்கா. இதனால் மத்திய கிழக்கில் உச்சக்கட்ட பதற்றம் ஏற்பட்டிருக்கிறது.
கடந்த 2 நாட்களில், ஈரானின் IRGC ராணுவம் அமெரிக்க கடற்படை கப்பலை குறிவைத்து 2 முறை கண்டம் விட்டு கண்டம் பாயும் பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவி தாக்குதல் நடத்த முயன்றது என்று அமெரிக்கா குற்றம்சாட்டியிருக்கிறது. இந்த தாக்குதல்களை அமெரிக்க போர்க்கப்பல் வெற்றிகரமாக முறியடித்தது, தனது ரோந்து பணியை தொடர்ந்து. இருப்பினும், போர்க்கப்பல்கள் மீது எப்படி தாக்குதல் நடத்தலாம்? என்று அமெரிக்கா கடும் அதிருப்தியில் இருக்கிறது.

இந்த தாக்குதலுக்கு பதிலடியாக, IRGC அமைப்பின் நிதி உதவிக்கு காரணமாக எண்ணெய் டேங்கர் கப்பல்களை கண்டுபிடித்து, அதில் 5 கப்பல்களை அமெரிக்கா தாக்கி அழித்திருக்கிறது. தாக்குதலுக்கு முன் கப்பலில் இருந்த மாலுமிகள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேற உத்தரவிடப்பட்டதால் உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படவில்லை.
M/T Kaviz, M/T Charminar, M/T Horizon 1, மற்றும் M/T Riesco அகிய 4 கப்பல்கள் தாக்கி அழிக்கப்பட்டிருக்கின்றன. கார்க் தீவு அருகே M/T Derya என்று 1 கப்பல் அழிக்கப்பட்டிருப்பதாக அமெரிக்கா தெரிவித்திருக்கிறது. அமெரிக்கா மீது ஈரான் எப்போதெல்லாம் தாக்குதல் நடத்த முயற்சிக்கிறதோ அப்போதெல்லாம் அதன் கப்பல்கள் தாக்கி அழிக்கப்படும் என்று அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ தெரிவித்திருக்கிறார்.
அமெரிக்காவின் தாக்குதலுக்கு பதிலடியாக குவைத், பஹ்ரைன் நாட்டு துறைமுகங்களுக்கு அருகே செயல்படும் எண்ணெய் கப்பல்கள் மீது பதிலடி தாக்குதல் நடத்தப்போவதாக ஈரான் மிரட்டல் விடுத்திருக்கிறது. வெறும் மிரட்டலுடன் மற்றும் நின்றுவிடாமல், ஜோர்டனில் உள்ள அமெரிக்க ராணுவ தளம் மீதும் ஈரான் தாக்குதல் நடத்தியிருக்கிறது.
ஈரானின் IRGC, ஜோர்டனில் உள்ள அமெரிக்க படைகள் தங்கியிருக்கும் அல்-அஸ்ராக் ராணுவ தளத்தை குறி வைத்து கனரக பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலின்போது ஜோர்டன் நாட்டின் வான் பாதுகாப்பு அமைப்புகள் தீவிரமாக செயல்பட்டு ஈரான் எல்லையிலிருந்து வந்த 20 ஏவுகணைகளில் 18 ஏவுகணைகளை வான் வெளியிலேயே சுட்டு வீழ்த்திவிட்டன. இருப்பினும் 2 ஏவுகணைகள் ஆள் நடமாட்டம் இல்லாத வெட்டவெளி பகுதியில் விழுந்ததாக ஜோர்டன் கூறியிருக்கிறது.
ஈரான் கப்பல்களை அமெரிக்கா தாக்கி அழித்திருப்பதும், அமெரிக்காவின் ராணுவ தளங்களை குறி வைத்து ஈரான் தாக்குதல் நடத்தியிருப்பதும் மத்திய கிழக்கில் உச்சக்கட்ட பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றன.

