ராமாயணம் திரைப்படம்: ரூ.100 கோடி சம்பளத்தை விட்டு கொடுத்த ராவணன் ’யாஷ்’.. காரணம் என்ன?
நடப்பாண்டில் மிகப்பெரிய பிளாக் பஸ்டர் படமாக ராமாயணம் திரைப்படம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரன்பீர் கபூர் ராமராகவும், சாய் பல்லவி சீதையாகவும் , யாஷ் ராவணனாகவும் நடிக்கும் ராமாயணம் திரைப்படம் மிகப்பிரம்மாண்டமாக தயாரிக்கப்பட்டுள்ளது.
வழக்கமாகவே இதிகாச கதை கொண்ட படங்களுக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு இருக்கும். அந்த வகையில் நவீன தொழில்நுட்பங்களின் உதவியோடு கிராஃபிக்ஸ் அமைக்கப்பட்டு ராமாயண காவியம் இரண்டு பாகங்களாக படமாக வர உள்ளது. இந்த படத்தில் ராவணன் பாத்திரத்தில் யாஷ் நடிப்பதால் ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.

இந்நிலையில் யாஷ் ராமாயணம் திரைப்படத்தின் இரண்டு பாகங்களுக்கும் தனக்கு தரப்படுவதாக இருந்த 100 கோடி ரூபாய் சம்பளத்தை விட்டுக்கொடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதற்கு பதிலாக அவர், இப்படத்தின் தென் இந்திய தியேட்டர் வெளியீட்டு உரிமைகளை தனது சம்பளமாக கோரியுள்ளதாக கூறப்படுகிறது.
முதலில் ராமாயணம் படத்தில் ராவணன் கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக அதன் இரண்டு பாகங்களுக்கும் சேர்த்து சுமார் 100 கோடி சம்பளமாக யாஷ் கேட்டதாக சொல்லப்படுகிறது. ஆனால் தற்போது, அந்த நிலையான ஊதியத்திற்கு பதிலாக படத்தின் தென்னிந்திய விநியோக உரிமையை அவர் கேட்கிறார் என சாச்னிக் தளம் வெளியிட்டுள்ள செய்தி கூறுகிறது.
யாஷ் இப்படத்தில் வெறும் நடிகராக மட்டும் இல்லாமல், நமித் மல்ஹோத்ராவின் பிரைம் ஃபோகஸ் ஸ்டுடியோஸ் நிறுவனத்துடன் இணைந்து தனது சொந்த நிறுவனமான மான்ஸ்டர் மைண்ட் கிரியேஷன்ஸ் மூலம் இணை தயாரிப்பாளராகவும் களமிறங்கியுள்ளார்.
ராமாயணம் திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் தயாரிப்பாளர்களின் எதிர்பார்ப்பை விஞ்சி மிகப்பெரிய வெற்றியை பெற்றால், 100 கோடி சம்பளத்தை விட பல மடங்கு அதிகமான லாபத்தை யாஷ் ஈட்ட முடியும். அதேசமயம், படம் வசூலில் பின்தங்கினால் அது அவருக்குப் பாதிப்பாக மாறக்கூடும் என்பதால் இது ஒரு பெரிய பிஸினஸ் ரிஸ்க் ஆகவும் பார்க்கப்படுகிறது.
யாஷ் நடிப்பில் அண்மையில் வெளியான ‘டாக்சிக் படம் எதிர்பார்த்த வசூலை பெறவில்லை. இந்நிலையில் யாஷ் மிகுந்த கவனத்துடன் ராமாயணம் படத்தின் பிஸ்னஸை திட்டமிடுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ராமாயணம் திரைப்படத்தின் முதல் பாகம் வரும் நவம்பர் 6ஆம் தேதி வெளியாக உள்ளது.
இந்தியா மட்டுமில்லாமல் உலகமெங்கும் இந்த படத்தை பிரம்மாண்டமாக திரையிட தயாரிப்பாளர்கள் முடிவு செய்துள்ளனர். அதுமட்டுமில்லாமல் ராவணன் கதாபாத்திரத்திற்கு யாஷ் மிக பொருத்தமாக இருப்பதால் நிச்சயம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
4000 கோடி ரூபாய் பட்ஜெட்டில் மிக பிரம்மாண்டமாக ராமாயணம் திரைப்படம் எடுக்கபப்ட்டுள்ளது எனவே படத்தை வெற்றி அடைய செய்ய படக்குழு ஏற்கனவே பிரமோஷன் வேலைகளை தொடங்கிவிட்டது. இதில் இணை தயாரிப்பாளராக உள்ள யாஷ், சம்பளத்தையும் விட்டு கொடுத்துள்ளார். அந்த வகையில் படம் வென்றால் பெரிய லாபம் உண்டு. ஹாலிவுட் திரைப்படம் அளவுக்கு படத்தை வெளியிட திட்டமிடுகின்றனர்.

