ஜார்ஜ் டவுன்:
பினாங்கு மாநிலத்தில் சாலை வரி மற்றும் காப்பீடுகளை புதுப்பிக்கத் தவறியதால், சுமார் RM10 லட்சம் மதிப்புள்ள ‘லம்போர்கினி ஹுரக்கான்’ (Lamborghini Huracan) உட்பட 11 சொகுசு வாகனங்களைப் பினாங்கு சாலைப் போக்குவரத்துத் துறை (JPJ) பறிமுதல் செய்தது.
கடந்த செப்டம்பர் 3-ஆம் தேதி பினாங்கு JPJ மேற்கொண்ட சிறப்புச் சோதனையின் (Luxury Operation) போது இந்த வாகனங்கள் பிடிபட்டன.
சோதனையில் சிக்கிய அனைத்து 11 வாகனங்களின் மோட்டார் வாகன உரிமங்களும் காலாவதியாகியிருந்ததோடு, அவற்றுக்குச் செல்லுபடியாகும் காப்பீடுகளும் இல்லை என்பது தெரியவந்தது.
லம்போர்கினி தவிர மெர்சிடீஸ் பென்ஸ் (Mercedes-Benz), வால்வோ (Volvo), பிஎம்டபிள்யூ (BMW), ஆடி (Audi) மற்றும் டொயோட்டா அல்ஃபார்ட் (Toyota Alphard) ஆகிய பிரபல சொகுசு ரக கார்களும் பறிமுதல் செய்யப்பட்டவற்றுள் அடங்கும்.
வரி ஏய்ப்பு குறித்து பினாங்கு JPJ தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இதனால் அரசாங்கத்திற்குச் செலுத்த வேண்டிய RM20,000-க்கும் அதிகமான சாலை வரி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
இதில் RM10 லட்சத்திற்கும் அதிகமான மதிப்பு கொண்ட ‘லம்போர்கினி ஹுரக்கான்’ காரின் சாலை வரி கடந்த ஜூன் மாதத்துடன் காலாவதியாகியுள்ளது. இத்தகைய அதிநவீன சொகுசு கார்களுக்கு ஆண்டிற்குச் சுமார் RM12,000 வரை சாலை வரி செலுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது,” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாகனத்தின் மதிப்பையோ அல்லது உரிமையாளரின் அந்தஸ்தையோ பார்த்துச் சட்ட நடவடிக்கையிலிருந்து விலக்கு அளிக்க முடியாது என்றும், 1987-ஆம் ஆண்டு சாலைப் போக்குவரத்துச் சட்டத்தை மீறுபவர்கள் மீது எவ்விதச் சமரசமும் இன்றி வெளிப்படையாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பினாங்கு JPJ எச்சரித்துள்ளது.
குறிப்பாகச் சொகுசு வாகனங்களைப் பயன்படுத்தும் உரிமையாளர்கள், தங்களது சாலை வரி மற்றும் காப்பீடுகளை முறையாகப் புதுப்பித்துச் சட்டத்தை மதிப்பதை உறுதிசெய்ய வேண்டும் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்



