புதிய தலைமை செயலகம் எங்கே அமைகிறது? இடத்தை இறுதி செய்தது விஜய் அரசு..!!
முதலமைச்சர் விஜய் , தமிழகத்திற்கு புதிய தலைமை செயலகம் கட்டப்படும் என்றும் தற்போது தலைமை செயலகம் செயல்படும் புனித ஜார்ஜ் கோட்டை பாரம்பரிய சின்னமாக பராமரிக்கப்படும் என்றும் அறிவித்திருந்தார். எனவே புதிய தலைமை செயலகம் சென்னையின் எந்த பகுதியில் அமையும் என எதிர்பார்ப்பு எழுந்த நிலையில் தமிழ்நாடு அரசு இடத்தை இறுதி செய்துள்ளது.
தமிழ்நாட்டின் தலைமை செயலகம் மற்றும் அரசு துறைகள் அனைத்துமே புனித ஜார்ஜ் கோட்டையில் தான் செயல்படுகிறது. இங்கே இட நெருக்கடி ஏற்பட்டுள்ளதாகவும் வாகன நிறுத்துமிடம், ஊழியர்களுக்கான அடிப்படை வசதிகள் செய்து தர முடியாத நிலை இருப்பதாகவும் தொடர்ந்து புகார்கள் எழுந்தன. இது பாரம்பரிய தளம் என்பதால் கட்டட விரிவாக்கங்களுக்கும் சாத்தியமில்லை. எனவே தலைமை செயலகத்தை புனித ஜார்ஜ் கோட்டையில் இருந்து இடம் மாற்றம் செய்ய முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டார். இதனை சட்டப்பேரவையிலும் அறிவித்தார்.

இந்நிலையில் தமிழகத்தின் புதிய சட்டமன்ற மற்றும் தலைமை செயலக வளாகமானது சென்னை Foreshore Estate எனப்படும் பட்டினப்பாக்கம் பகுதியில் அமைக்கப்பட உள்ளது. முன்னதாக அரசு கிண்டியில் உள்ள நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலையம், நந்தம்பாக்கம் ஃபின்டெக் சிட்டிக்கு எதிரே உள்ள இடம் மற்றும் பட்டினப்பாக்கம் என மூன்று இடங்களை பரிசீலனை செய்தது. இதில் 25 ஏக்கருக்கும் அதிகமான பரப்பளவு இடம் இருக்கும் பட்டினப்பாக்கமே சிறந்த இடமாக இருக்கும் என தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறியதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி கூறுகிறது.
பட்டினப்பாக்கத்தில் தலைமை செயலகம் அமைக்க தமிழக வீட்டுவசதி வாரியம் மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சி ஆகியவை சனிக்கிழமையன்று அனுமதி அளித்துள்ளன. விரைவில் இதற்கான முறையான நிர்வாக அனுமதி அரசாணை வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன்படி இங்கே உள்ள வீட்டுவசதி வாரியத்திற்கு சொந்தமான 21.37 ஏக்கர் நிலத்தை பொதுத்துறை பயன்படுத்துவதற்கு வீட்டுவசதி வாரியம் அனுமதி வழங்கியுள்ளது. இந்த நிலங்கள் கடந்த 1958 ஆம் ஆண்டு வீட்டுவசதி திட்டங்களுக்காக வாங்கப்பட்டவை.
இங்கு 1963 முதல் 1968 வரை 1,112 அரசு ஊழியர் குடியிருப்புகளும், 96 TNHB குடியிருப்புகளும் கட்டப்பட்டன. பின்னர் 1986-ல் 60 குடியிருப்புகளும், 1998-ல் 112 குடியிருப்புகளும் கட்டப்பட்டு மொத்தம் 1,380 குடியிருப்புகள் இருந்தன. இதில் 1,284 குடியிருப்புகள் பழுதடைந்து சேதமடைந்ததால் இடிக்கப்பட்டு, அந்த இடம் காலியாகவே இருந்தது. தற்போது TNHB தனது சொந்தமான மீதமுள்ள 96 குடியிருப்புகளையும் இடிப்பதற்கான நடவடிக்கைகளை தொடங்கியுள்ளது.
இது தவிர சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான 0.93 ஏக்கர் நிலத்தை பயன்படுத்த மாநகராட்சியும் அனுமதி அளித்துள்ளது. மேற்கண்ட நிலங்களுடன் வருவாய் துறை வசம் உள்ள சில நிலங்களையும் சேர்த்து, ஒட்டுமொத்த வளாகமும் 26.5 ஏக்கர் பரப்பளவை கொண்டிருக்கும் என்று அரசு வட்டாரங்கள் அளித்த தகவல்கள் தெரிவிக்கின்றன.
முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசு விரைவில் இதற்கு ஒப்புதல் தரும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே பட்டினப்பாக்கத்தில் தலைமை செயலக ஒருங்கிணைந்த வளாகம் அமைக்கப்பட்டால் கடல் அழகை ரசித்தபடியே முதலமைச்சர்கள், அமைச்சர்கள் மற்றும் அரசு துறை அதிகாரிகள் வேலை செய்யும் வாய்ப்பு கிடைக்கும். இந்த வளாகத்தின் முக்கிய கட்டடமானது 15 அடுக்கு மாடிகளை கொண்டதாகவும், 20 லட்சம் சதுர அடி பரப்பளவு கொண்டதாகவும் கட்டப்படவுள்ளது. இதற்காக அரசு 1,200 கோடி ரூபாய் செலவு செய்ய உள்ளது.

