நாடாளுமன்றத் தேர்தலில் உத்தரபிரதேசத்தில் பாஜகவுக்கு பின்னடைவு ஏற்பட்டதை அடுத்து, அங்கு கட்சியில் சில மாற்றங்களை செய்ய முடிவு செய்துள்ளதாகவும், யோகி ஆதித்யநாத்தின் பதவிக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
உத்தரபிரதேசத்தில் மொத்தம் 80 நாடாளுமன்றத் தொகுதிகள் உள்ள நிலையில், கடந்த 2014 மற்றும் 2019 தேர்தல்களில் பாஜக கணிசமான இடங்களை கைப்பற்றியது. இதனால், மத்தியில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி எளிதாக ஆட்சி அமைத்தது. உத்தரப்பிரதேசத்தில் கணிசமான தொகுதிகளை பாஜக பெற்றதால் கட்சிக்கு மிகப்பெரிய உத்வேகம் ஏற்பட்டது. கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக கூட்டணி 62 இடங்களைப் பிடித்தது.
ஆனால், தற்போது நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக கூட்டணி பெரும் சரிவை கண்டிருக்கிறது. பாஜக கூட்டணிக்கு அங்கு வெறும் 36 இடங்கள் மட்டுமே கிடைத்தது. இது கடந்த தேர்தலை விட 26 இடங்கள் குறைவாகும். குறிப்பாக, பாஜக மட்டும் 33 இடங்களைக் கைப்பற்றியது. அதே நேரத்தில் கடந்த 2019 தேர்தலில் வெறும் 5 இடங்களைப் பெற்ற அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாதி கட்சி, இந்த தேர்தலில் 37 இடங்களை பெற்று மிகப்பெரிய சக்தியாக உருவெடுத்துள்ளது.
அதேபோல், கடந்த தேர்தலில் ஒரு இடத்தில் மட்டுமே வெற்றிபெற்ற காங்கிரஸ் கட்சி, தற்போது 6 இடங்களில் வென்றுள்ளது. ராமர் கோயில் கட்டிய நிலையிலும், உத்தரப்பிரதேசத்தில் பாஜக பின்னடைவை எதிர்கொண்டது, அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்துக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில், பாஜக சரிவை சந்தித்த மாநிலங்களில், கட்சி நிர்வாகத்தில் மாற்றங்களை செய்ய தலைமை முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க:
எதிர்க்கட்சி தலைவராகிறார் ராகுல் காந்தி? – காங்கிரஸ் கட்சியின் மாஸ்டார் பிளான்…
இதனிடையே, மகாராஷ்டிராவில் பாஜக தலைமையிலான கூட்டணி சரிவை கண்டிருப்பதால், அதற்கு பொறுப்பேற்று, அம்மாநில துணை முதலமைச்சர் பதவியில் இருந்து விலகுவதற்கு தேவேந்திர பட்னாவிஸ் கட்சித் தலைமையிடம் விருப்பம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இதேபோல், பல மாநில பாஜக தலைவர்களும் ஆலோசித்து வரும் நிலையில், யோகி ஆதித்யநாத் டெல்லி செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. டெல்லியில் கட்சித் தலைமையுடன் ஆலோசனை நடத்திய பிறகு முடிவு எடுக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
.
&w=750&resize=750,375&ssl=1)
