பரந்தூரை விடுங்க வேகமெடுக்கும் வேலூர் விமான நிலைய திட்டம்:நிலம் கையகப்படுத்த 4 கிராமங்கள் தேர்வு!!
தமிழ்நாட்டின் வட மாவட்டங்களில் பிரதானமானது வேலூர். இங்கே கூடிய விரைவில் விமான நிலையம் விரிவாக்கம் செய்யப்பட இருக்கிறது. உதான் திட்டத்தில் அமைக்கப்பட்ட சிறிய விமான நிலையம் விரைவில் வணிக ரீதியான பயணிகள் விமாங்களை இயக்கும் வகையில் விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. இந்த பணிகள் என்ன நிலையில் இருக்கின்றன என்பதற்கான அப்டேட் வெளியாகியுள்ளது.
சென்னை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள வேலூர் புதிய விமான நிலையத்தை விரிவாக்கம் செய்ய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக, அதனை சுற்றியுள்ள நான்கு விவசாய கிராமங்களில் இருந்து 300 ஏக்கருக்கும் அதிகமான விவசாய நிலங்களை மாவட்ட நிர்வாகம் விரைவில் கையகப்படுத்த உள்ளது. விமான நிலைய விரிவாக்கத்திற்கு நிலங்களை அடையாளம் காணும் பணியில் வருவாய் துறை அதிகாரிகள் தீவிரமாக இறங்கியுள்ளனர் என தி இந்து நாளிதழ் செய்தி தெரிவிக்கிறது.

வருவாய் துறை அதிகாரிகள் வேலூர் மாவட்ட ஆட்சியர் பி.எஸ். லீலா அலெக்ஸ் புதிய விமான நிலைய விரிவாக்கத்திற்காக குறைந்தது 300 ஏக்கர் நிலத்தை அடையாளம் காணுமாறு உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். தி இந்துவுக்கு பேட்டி அளித்துள்ள வருவாய் துறை அதிகாரி புதிய விமான நிலைய விரிவாக்கத்திற்கு உகந்த நிலங்களை சுற்றியுள்ள கிராமங்களில் கண்டறியுமாறு மாவட்ட ஆட்சியரிடமிருந்து எங்களுக்கு உத்தரவு வந்துள்ளது. அதற்கான பணிகளை நாங்கள் ஏற்கனவே தொடங்கிவிட்டோம் என கூறியுள்ளார்.
முன்னதாக தேமுதிக எம்பி எல்.கே. சுதீஷ் தனது நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி திட்டத்தின் கீழ் வேலூர் மாவட்டத்தில் 5 கோடி நிதி ஒதுக்கீடு செய்வது குறித்து விவாதிக்க மாவட்ட ஆட்சியர் லீலா அலெக்ஸை ஆட்சியரகத்தில் நேரில் சந்தித்துப் பேசினார். இதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய எல்.கே. சுதீஷ், வேலூர் மாவட்டத்திலுள்ள விமான நிலையத்தை விரிவாக்கம் செய்ய கூடுதலாக 100 ஏக்கர் நிலத்தை மாநில அரசு வழங்க வேண்டும் என மத்திய விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் கே. ராம் மோகன் நாயுடு கோரியுள்ளதாக தெரிவித்தார்.
இதற்கிடையே நிலம் கையகப்படுத்த பொய்கை, அப்துல்லாபுரம், அண்பூண்டி, புதூர் ஆகிய கிராமங்களில் உள்ள அரசு நிலங்கள், தனியார் பட்டா நிலங்கள் மற்றும் அரசு புறம்போக்கு நிலங்களை அடையாளம் காண நில ஆவணங்கள் மற்றும் சர்வே எண்களை வருவாய் அதிகாரிகள் சரிபார்த்து வருகின்றனர்.
இதனை தொடர்ந்து, அளவையர்கள் மற்றும் களப் பணியாளர்கள் உள்ளிட்ட வருவாய்த் துறை அதிகாரிகள் இந்த நிலங்களின் வரைபடங்களை தயாரிப்பார்கள். இது தனியார் நில உரிமையாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய மொத்த இழப்பீட்டுத் தொகையை மதிப்பிடுவதற்கு உதவியாக இருக்கும்.
தமிழக அரசு இந்த நிலங்களை கையகப்படுத்தி இந்திய விமான நிலைய ஆணையத்திடம் ஒப்படைக்கும். நில உரிமையாளர்களுக்கு இழப்பீட்டு தொகையை வழங்கிய பிறகு, அந்த நிலத்தின் முழு உரிமையும் விமான நிலைய ஆணையத்திற்கு செல்லும். இதற்கு குறைந்தபட்சம் ஆறு மாதங்கள் ஆகும். புதிய விமான நிலையம் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளதால், இதன் விரிவாக்க பணிகள் துரிதப்படுத்தப்படும் என வருவாய் துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.
உதான் திட்டத்தின் கீழ் வேலூரில் அப்துல்லாபுரத்தில் 100 ஏக்கர் பரப்பளவில் ஏற்கனவே, 850 மீட்டர் நீளமுள்ள ஓடுதளம் , டாக்ஸிவே, தரைவழி இயக்க உபகரணங்கள், விமான போக்குவரத்து கட்டுப்பாட்டகம், விமான போக்குவரத்து தகவல் பெறும் வசதி, முனையக் கட்டடம் மற்றும் கிடங்கு ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன.
முதலில் 8 பேர் மட்டுமே பயணம் செய்யக்கூடிய சிறிய விமானங்களை இயக்கும் வகையில் இருந்த பழைய விமான ஓடுதளம், தற்போது பெங்களூரு, சென்னை, ஹைதராபாத் போன்ற முக்கிய விமான நிலையங்களை இணைக்கும் வகையில் 20 பேர் பயணிக்கக்கூடிய விமானங்கள் இயங்கும் வகையில் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.

