International
oi-Hema Vandhana
பாங்காக்: எக்கச்சக்க பணம், ஏகப்பட்ட புகழ் என வாழ்க்கையில் எல்லாவற்றையும் அடைந்த பிறகும் மனநிம்மதி கிடைக்காவிட்டால் என்ன செய்வீர்கள்? இதோ தாய்லாந்தை சேர்ந்த ஒரு தொழிலதிபர் எடுத்துள்ள முடிவுதான், இப்போது உலகம் முழுவதும் கவனம் பெற்றுள்ளது. பல ஆண்டுகளாகவே, தான் கட்டியெழுப்பிய ஐஸ்கிரீம் தொழிலை சுமார் ரூ.47 கோடிக்கு விற்றுவிட்டு, காட்டுக்குள் போய் துறவியாக வாழ போகிறாராம்…!!!
தாய்லாந்தைச் சேர்ந்தவர் சிரிபோங் அக்காரஸ்ரியுக். இவர் “ஹாவெல்ஸ்” (Hawell’s) என்ற ஐஸ்கிரீம் கம்பெனியின் நிறுவனர். ஒரு சாதாரண ஐஸ்கிரீம் விற்பனையாளராக தனது வாழ்க்கையைத் தொடங்கிய இவர், பிறகு சொந்தமாக தொழில் தொடங்கினார். கடந்த 1999-ம் ஆண்டு டிசம்பர் மாதம் பாங்காக்கில் உள்ள Central Pinklao-வில் ஹாவெல்ஸின் முதல் கடையை ஆரம்பித்தார் சிரிபோங்.

தாய்லாந்து தொழிலதிபர்
தொடங்கிய சில வருடங்களிலேயே பிசினஸ் வேகமாக வளர்ந்தது. வெறும் 3 ஆண்டுகளில் தாய்லாந்தின் பல பகுதிகளில் 22 கிளைகள் வரை ஹாவெல்ஸ் விரிவடைந்தது. ஷாப்பிங் மால்களில் ஹாவெல்ஸ் ஐஸ்கிரீம் கடைகள் பிரபலமாகின.
ஆனால காலப்போக்கில் போட்டி அதிகரித்தது… சில பெரிய ஐஸ்கிரீம் நிறுவனங்கள் ஷாப்பிங் மால்களுடன் ஸ்பெஷலான அக்ரிமெண்ட்டுகளை போட்டுக் கொண்டதால், ஹாவெல்ஸுக்கு புதிய கடைகளை திறக்க இடம் கிடைப்பது சிரமமானது. அதனால் பல கிளைகள் மூடப்பட்டன. Central Pinklao-வில் இருந்த முதல் கடையும் 2014-ல் மூடப்பட்டது.
ஐஸ்கிரீம் பிசினஸ்
இதையடுத்து 2023-ல் Nonthaburi பகுதியில் தனியாக ஒரு கடையை தொடங்கி ஹாவெல்ஸ் மீண்டும் களமிறங்கியது. இப்போது அந்த நிறுவனம் ஒரே ஒரு கிளையுடன் இயங்கி வருகிறது. கடந்த 2 ஆண்டுகளாக பல ஷாப்பிங் மால்களை அணுகி புதிய கிளைகள் தொடங்க இடம் கேட்டும், காலி இடங்கள் இருந்தபோதிலும் இடம் கிடைக்கவில்லை என்று சிரிபோங் தெரிவித்துள்ளார்.
இப்படிப்பட்ட சூழலில், தனது நிறுவனத்தை 165 மில்லியன் தாய் பாட், அதாவது நம்முடைய நாட்டு மதிப்பில் சுமார் ரூ.47 கோடிக்கு விற்பனை செய்வதாக அறிவித்துள்ளார்.
47 கோடி வருமானம்
இது வெறும் நிறுவனத்தின் பெயரை மட்டும் விற்பது கிடையாது, அலுவலகம், தொழிற்சாலை, இயந்திரங்கள், உரிமங்கள், கடை, ஹாவெல்ஸ் வர்த்தக முத்திரை, தொழில் நுணுக்கங்கள், ஐஸ்கிரீம் தயாரிப்பு முறைகள் என அத்தனையும் இந்த விற்பனையில் அடங்கும். அதனால்தான், இவைகளை வாங்கும் சரியான நபரை அறிமுகப்படுத்துபவருக்கு 5 மில்லியன் தாய் பாட் பரிசாகவும் வழங்குவதாக தெரிவித்துள்ளார்.
ஆனால், இந்த விற்பனைக்கு முக்கிய காரணம் தொழில் நஷ்டம் என்று மட்டும் சொல்லிவிட முடியாது. 15 ஆண்டுகளுக்கும் மேலாகவே துறவற வாழ்க்கை குறித்து சிந்தித்து வந்ததாக சிரிபோங் சொல்கிறார். இன்னும் 2 ஆண்டுகளில் தனது தொழில் மற்றும் வழக்கமான வாழ்க்கையை விட்டுவிட்டு புத்த துறவியாக வேண்டும் என்பதே அவரது ஒரே குறிக்கோளாம்.
காட்டுக்குள் சாமியாராக போகிறார்
இதற்காக காட்டுக்குள் போய் சாமியாராக போகிறார்.. முதல்வேலையாக காட்டுப்பகுதியில் நிலம் வாங்கப்போகிறாராம்.. பிறகு, தியானம் செய்வதற்கான அமைதியான இடத்தை உருவாக்க போகிறாராம்.. அதற்கு பிறகு அங்கு தனிமையில் வாழ்ந்து புத்த மத போதனைகளை கடைப்பிடிக்க விரும்புகிறார். இறுதியில் “அரஹந்தர்” எனப்படும் உயர்ந்த ஆன்மிக நிலையை அடைவதே தனது இலக்கு என்றும் சிரிபோங் தெரிவித்துள்ளார்.
புத்த மதத்தின் மீது அவருக்கு நீண்டகாலமாகவே ஆர்வம் இருந்து வருகிறது. 2016-ல் புத்தரின் போதனைகளை அடிப்படையாகக் கொண்டு “Success Derived from the Buddha” என்ற புத்தகத்தையும் அவர் எழுதியுள்ளார்.
வியாபாரத்தை விட்டாலும், தான் உருவாக்கிய ஹாவெல்ஸ் நிறுவனம் அழிந்துவிடக்கூடாது என்பதுதான் அவரது இன்னொரு ஆசை. “நான் உலக வாழ்க்கையை விட்டுச் சென்றாலும், ஹாவெல்ஸ் தொடர்ந்து வளர வேண்டும்” என்ற எண்ணத்துடன் புதிய உரிமையாளரைத் தேடி கொண்டிருக்கிறாராம் சிரிபோங்..
இருந்தாலும், காட்டுக்குள் போய் துறவியாக வாழ ஐஸ்கிரீம் தொழிலை ரூ.47 கோடியையும் தூக்கியெறிய முடிவெடுத்து விட்டாரே?!!

