Cricket
oi-Yogeshwaran Moorthi
மும்பை: இந்திய ஒருநாள் அணியில் ஜாம்பவான் வீரரான ரோகித் சர்மாவை நீக்குவதற்கான எந்த திட்டமும் இல்லை என்று பிசிசிஐ செயலாளர் தேவ்ஜித் சைக்கியா தெரிவித்துள்ளார். இருப்பினும் பிசிசிஐ ஆலோசனை கூட்டத்தை தேர்வுக் குழு தலைவர் அஜித் அகர்கர் புறக்கணித்திருக்கிறார். இதனால் பிசிசிஐ நிர்வாகத்தில் சில மாற்றங்கள் நடக்கக் கூடும் என்று பார்க்கப்படுகிறது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கான இறுதிப் போட்டிக்கு இந்திய அணி முன்னேறுவதற்கான வாய்ப்புகள் குறைந்து கொண்டே வருகிறது. இன்னொரு பக்கம் 2027 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணி இன்னும் முழுமையாக கட்டமைக்கப்படவில்லை. சீனியர் வீரரான ரோகித் சர்மாவை எப்படி கையாள்வது என்று புரியாமல் இந்திய அணி நிர்வாகம் திணறி வருகிறது.

இந்த நிலையில் மும்பையில் பிசிசிஐ மற்றும் இந்திய அணி கேப்டன்களான சுப்மன் கில், ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் பயிற்சியாளர் கம்பீர் மற்றும் என்சிஏ தலைவர் விவிவி லக்ஷ்மண் ஆகியோரும் பங்கேற்றனர். ஆனால் தேர்வுக் குழு தலைவர் அஜித் அகர்கர் பங்கேற்கவில்லை. இதற்கான எந்த காரணமும் விளக்கப்படவில்லை.
இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பின் பிசிசிஐ செயலாளர் தேவ்ஜித் சைக்கியா பேசுகையில், இங்கிலாந்து அணிக்கு எதிராக கடைசியாக ஆடிய ஒருநாள் போட்டியில் ரோகித் சர்மா 138 ரன்களை எடுத்தார். அனைத்து போட்டிகளிலும் நன்றாக ஆடி வருகிறார். இதற்கு மேல் அவர் என்ன செய்ய வேடும். அவரின் இடம் குறித்த பேச்சுகள் ஏன் வருகிறது என்பதே புரியவில்லை.
அதனால் இப்போதைக்கு வதந்திகளுக்கு பதில் அளிக்க விரும்பவில்லை. இந்திய அணியின் எதிர்கால திட்டம் குறித்து தான் ஆலோசனை நடந்தது. ஆஃப்கானிஸ்தான் தொடர், வெஸ்ட் இண்டீஸ் தொடர், நியூசிலாந்து தொடர் ஆகியவற்றுக்கு தயாராவது குறித்து ஆலோசித்தோம் என்றார். அதேபோல் விவிஎஸ் லக்ஷ்மண் இந்திய அணியின் இயக்குநராக நியமிக்கப்பட உள்ளதாக வெளியான தகவலையும் அவர் மறுக்கவில்லை.
இதுதொடர்பாக கேள்வி எழுப்பப்பட்ட போதும், அதுதொடர்பாக பேச முடியாது என்று கூறி சென்றார். இதனால் நியூசிலாந்து டெஸ்ட் தொடருக்கு முன் விவிஎஸ் லக்ஷ்மண் இந்திய அணியின் இயக்குநராக நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் கம்பீரின் நடவடிக்கைகளுக்கு கட்டுப்பாடு விதிக்க முடியும் என்றும் கருதப்படுகிறது.

