
இலங்கையின் வெலிமடை, மிரஹவத்த பகுதியில், பொலிஸ் பயிலுநர் கான்ஸ்டபிள் பதவிக்கு விண்ணப்பித்த 24 வயது இளம்பெண்ணிடம் அத்துமீறியதாகக் கூறப்படும் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த இளம்பெண் எதிர்வரும் 9ஆம் திகதி மருத்துவப் பரிசோதனைக்கு அழைக்கப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில், செப்டம்பர் 1ஆம் திகதி சிவில் உடையில் அவரது வீட்டுக்குச் சென்ற குறித்த பொலிஸ் அதிகாரி, மருத்துவப் பரிசோதனைக்கு முன்னர் அவரது அந்தரங்கப் பகுதியில் உள்ள தழும்புகள் தொடர்பாக அறிக்கை வழங்க வேண்டும் எனக் கூறியதாகவும், அந்த அறிக்கை இல்லையெனில் வேலை கிடைக்காது என அச்சுறுத்தியதாகவும் பொலிஸில் அளித்த முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.
அதிகாரியின் கோரிக்கைக்கு இணங்க அறையில் அமர்ந்த பின்னர், அவர் தனது ஆடையை உயர்த்தி அந்தரங்கப் பகுதியைத் தொட்டதாகவும், உடனடியாக அவரது கையைத் தட்டிவிட்டு சமையலறைக்குச் சென்று தனது தாயிடம் சம்பவத்தைத் தெரிவித்ததாகவும் இளம்பெண் முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பாக வெலிமடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

