செப்டம்பர் 15 முதல் தமிழ்நாட்டில் எல்லாமே டிஜிட்டல் தான்: முதலமைச்சர் விஜய் அறிவிப்பு..!!
புதிய தொழில்நுட்பங்களின் வருகைக்கு ஏற்ப அரசு சேவைகளை நாம் பெறும் விதமும் மாறி வருகிறது. குறிப்பாக சான்றிதழ்கள் பெறுவது எல்லாம் டிஜிட்டல் மயமாக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் மிக முக்கியமான ஒரு அரசு சேவை வரும் 15ஆம் தேதி முதல் முழுவதும் டிஜிட்டல் முறைக்கு மாற்றப்பட உள்ளது.
தமிழ்நாட்டில் வாகன பதிவு மற்றும் ஓட்டுநர் உரிமம் தொடர்பான பல்வேறு புதிய டிஜிட்டல் சேவைகள் வரும் செப்டம்பர் 15-ஆம் தேதி முதல் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக தமிழக முதலமைச்சர் விஜய் சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார்.இந்த புதிய முறை நடைமுறைக்கு வருவதன் மூலம், குடிமக்கள் தாங்கள் முதலில் விண்ணப்பித்த அலுவலகத்தை தாண்டி, தமிழ்நாட்டில் உள்ள எந்தவொரு போக்குவரத்து துறை அலுவலகத்திலும் தங்களின் வாகன பதிவு மற்றும் ஓட்டுநர் உரிமம் தொடர்பான சேவைகளை பெற முடியும்.

இந்த திட்டத்தின் கீழ், புதிதாக பதிவு செய்யப்படும் வாகனங்களின் உரிமையாளர்களுக்கு டிஜிட்டல் வாகன பதிவு சான்றிதழ் (Digital RC) ஆன்லைன் மூலமாக வழங்கப்படும். இந்த வசதியானது செப்டம்பர் 15, 2026 முதல் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பகுதிகளிலும் அமலுக்கு வருகிறது. இதன் மூலம் அஞ்சல் வழியில் ஆசி புக் வரும் என்பதற்காக காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை, உங்கள் வாகனத்திற்கு ஆர்சி ஒதுக்கப்பட்டாலே உடனே மெசேஜ் வந்துவிடும் நீங்கள் ஆன்லைனிலேயே சான்றிதழை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
மேலும் வாகன ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கான தேர்வு அதாவது Driving Test-இல் வெற்றிபெறும் விண்ணப்பதாரர்களுக்கு, அவர்கள் தேர்ச்சி பெறும் அன்றைய தினமே டிஜிட்டல் ஓட்டுநர் உரிமம் (Digital Driving Licence) வழங்கப்படும். இந்த டிஜிட்டல் உரிம வசதியும் செப்டம்பர் 15 முதல் மாநிலம் முழுவதும் விரிவுபடுத்தப்பட உள்ளது. எனவே டெஸ்ட் முடித்து விட்டு எப்போது டிரைவிங் லைசென்ஸ் கிடைக்கும் என காத்திருக்க வேண்டிய அவசியம் நமக்கு இல்லை.
மேலும் இந்த சேவைகளுக்காக வழங்கப்படும் இந்த டிஜிட்டல் ஆவணங்களை அரசு அலுவலகங்கள் மற்றும் பிற அதிகாரப்பூர்வ நிறுவனங்கள், ஆவணங்களில் உள்ள கியூஆர் குறியீட்டை ஸ்கேன் செய்வதன் மூலமாக ஆன்லைனிலேயே எளிதாக சரிபார்த்து கொள்ள முடியும். இது போலி ஆவணங்களை கண்டறிய பெரிதும் உதவும்.
ஒருவேளை இந்த ஆவணங்கள் தொலைந்துவிட்டாலோ அல்லது சேதமடைந்தாலோ, பயனர்கள் மீண்டும் புதிய பிரதியை பெற விண்ணப்பித்து காத்திருக்க வேண்டிய அவசியமின்றி, தங்களது ஆவணங்களை ஆன்லைன் மூலமாக மீண்டும் பதிவிறக்கம் செய்து பிரிண்ட் செய்து கொள்ளும் வசதியும் இதில் செய்யப்பட்டுள்ளது.
வாகன பதிவு மற்றும் ஓட்டுநர் உரிமம் பெறுவதில் மக்களின் நேரம் வீணாவதை தடுக்கவும், போக்குவரத்து துறை சேவைகளில் வெளிப்படைத்தன்மையை கொண்டு வரவும் இந்த டிஜிட்டல் திட்டம் நடைமுறைக்கு வருகிறது. மேலும் தமிழ்நாட்டின் எந்த ஒரு ஆர்டிஓ அலுவலகத்திலும் ஓட்டுநர் உரிமத்திற்கு விண்ணப்பம் செய்து உரிமம் பெறும் வகையில் படிப்படியாக இது விரிவாக்கம் செய்ய இருப்பதாக முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளார்.

