பேங்க் லாக்கரில் நகை திருடப்பட்டால் நஷ்டஈடு கிடைக்குமா? எவ்வளவு கிடைக்கும்?
தங்கத்தை வீட்டில் வைத்திருக்க பயப்படும் பலர் வங்கி லாக்கரையே தேர்வு செய்கின்றனர். இந்த வசதி பலருக்கு உபயோகமாக இருந்தாலும்.. லாக்கரை உடைத்து நகையை திருடிவிட்டால் என்ன செய்வது? என்ற பயம் பெரும்பாலானோருக்கு இருக்கிறது. இது போன்ற சமயங்களில் வங்கி நஷ்டஈடு தருமா? ஆர்பிஐ இதற்கு என்னென்ன வழிமுறைகளை வகுத்திருக்கிறது? என்ற விவரங்களைத் தான் இந்தப் பதிவில் பார்க்கப் போகிறோம்.
லாக்கர் திருடப்பட்டால் என்ன நடக்கும்?: ஆர்பிஐ விதிகளின்படி ஒவ்வொரு வங்கியும் முறையாக தங்களுடைய லாக்கர் வசதியை கண்காணிக்க வேண்டும். இது அவர்களின் முதன்மையான கடமையாகும். வங்கி ஊழியர்களால் லாக்கர் திருடப்பட்டாலோ, கொள்ளையடிக்கப்பட்டாலோ அல்லது தீ விபத்து ஏற்பட்டாலோ வங்கிகள் கண்டிப்பாக வாடிக்கையாளர்களுக்கு நஷ்டஈடு வழங்க வேண்டும்.

எவ்வளவு நஷ்டஈடு வழங்கப்படும்?: வாடிக்கையாளர்கள் எந்தெந்த பொருளை லாக்கரில் வைத்திருக்கின்றனர் என்பதை கேட்பதற்கு வங்கிகளுக்கு எந்த அதிகாரமும் இல்லை. வாடிக்கையாளர்கள் பணம், நகை போன்ற முக்கிய சொத்துக்களை லாக்கரில் வைக்கலாம். ஆனால் வங்கியின் கவனக்குறைவு காரணமாக எந்த பொருள் காணாமல் போனாலும் வாடிக்கையாளர்களுக்கு இழப்பீடு வழங்க வங்கியே பொறுப்பேற்க வேண்டும்.
வங்கியின் தவறால் இது போன்ற சம்பவம் நடந்தால்… லாக்கர் சேவையைப் பெற வாடிக்கையாளர் செலுத்தும் வருடாந்திர கட்டணத்தைப் போல 100 மடங்கு வரை நஷ்டயிடாகப் பெற முடியும். இதற்காக ஆர்பிஐ 2021-ஆம் ஆண்டு புதிய வழிகாட்டுதல்களை வழங்கியது. அதன்படி தான் வங்கிகள் லாக்கர் சேவையை வழங்க வேண்டும்.
உதாரணமாக ஒரு வங்கியில் லாக்கரின் வருடாந்திர வாடகை ரூ.4,000 என்று வைத்துக் கொள்வோம். அப்படியானால் அந்த லாக்கரில் இருந்து எந்த பொருள் காணாமல் போனாலும் அதிகபட்ச இழப்பீடாக ரூ.4 லட்சம் வரை வங்கிகள் வழங்க வேண்டும். வங்கியின் அலட்சியத்தில் தான் இது போன்ற பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பது நிரூபிக்கப்பட வேண்டும். ஒரு வேளை இதை நிரூபிக்க முடியாமல் போனால் எந்த நஷ்டஈடும் கிடைக்காது.
வங்கியில் வழங்கப்படும் லாக்கர் வசதி உண்மையில் பாதுகாப்பானதா?: லாக்கரின் உள்கட்டமைப்பு வசதிகள் மற்றும் பாதுகாப்பு அம்சங்களின் அடிப்படையில் பார்க்கும்போது வீட்டில் வைப்பதை விட வங்கி லாக்கர்கள் பாதுகாப்பானவை தான். லாக்கர் வழங்கும் வங்கிகள் சுமார் 180 நாட்கள் வரை சிசிடிவி காட்சிகளை ஸ்டோரேஜ் செய்து வைத்திருக்க வேண்டும்.
மேலும் லாக்கர் உள்ள இடங்களில் தீப்பிடிக்காத வகையில் சுவர் அமைக்கப்பட்டிருக்கும். இயற்கை பேரிடர் வந்தாலும் அதை தாங்கும் அளவுக்கு கட்டமைப்பு வசதிகள் இருக்கும். இதையும் மீறி வங்கியின் அலட்சியத்தால் நடக்கும் அசம்பாவிதங்களுக்கு வங்கியே பொறுப்பேற்று நஷ்டஈடு வழங்கும்.
லாக்கரை பயன்படுத்துபவர் இறந்து விட்டால் என்ன நடக்கும்?: லாக்கரில் நகையோ அல்லது பணத்தையோ வைத்திருக்கும் நபர் துரதிஷ்டவசமாக இறந்து போனால் அவருடைய வாரிசுதாரர் உரிய ஆவணங்களை எல்லாம் சமர்ப்பிக்க வேண்டும். அதிலிருந்து 15 நாட்களுக்குள் வங்கிகள் வாரிசுதாரிடம் லாக்கரின் சாவியை ஒப்படைக்க வேண்டும்.
லாக்கரில் இருக்கும் நகைகளுக்கு இன்சூரன்ஸ் பெற முடியுமா?: பொதுவாக லாக்கர் வசதியை பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் வங்கிகளிடம் எந்த பொருட்களை லாக்கரில் வைக்கின்றனர் என்பதை தெரிவிக்க வேண்டிய அவசியம் இல்லை. இதனால் வங்கிகளால் அதற்கு ஏற்றபடி இன்சூரன்ஸ் வழங்க முடியாது. வங்கிகளிடமும் வாடிக்கையாளர்கள் உள்ளே வைக்கும் பொருட்களுக்கான பதிவு இருக்காது. இதை எந்த வங்கியும் பராமரிப்பது இல்லை. இதற்காகத்தான் வங்கிகள் லாக்கரில் உள்ள பொருட்களுக்கு ஏற்படும் எந்த ஒரு ஆபத்திற்கும் காப்பீடு வழங்க முடியாது என்பதை ஒப்பந்தத்தில் தெளிவாக குறிப்பிட்டிருக்கும்.
