கோலாலம்பூர்:
தனியார் நிறுவன ஊழியரான பெண் ஒருவர் பணி முடிந்து வீட்டிற்குத் திரும்பிக்கொண்டிருந்தபோது, அவர் ஓட்டிச் சென்ற வாகனம் கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதிய விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.
இன்று (செப்டம்பர் 2) நண்பகல் 12 மணியளவில் பத்து பஹாட் – மெர்சிங் சாலையின் 66-வது கிலோமீட்டரில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.
மேத்யூ பிலாங் (வயது 42) என்ற பெண்மணி, கிளவாங் நகரிலிருந்து கஹாங் நோக்கித் தனது மிட்சுபிஷி பஜெரோ காரை ஓட்டிச் சென்றுள்ளார் என்று, கிளவாங் மாவட்டப் போலிஸ் தலைமை அதிகாரி உதவி ஆணையர் பஹ்ரின் முகமட் நோ மெலிசா கூறினார்.
சம்பவ இடத்திற்கு வந்தபோது, அவரது வாகனம் திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையின் இடதுபுறத்தில் இருந்த மரத்தின் மீது பலமாக மோதியதாகக் நம்பப்படுகிறது.
“இந்த விபத்தில் பலத்த காயமடைந்த அப்பெண்மணி ஓட்டுநர் இருக்கையிலேயே சிக்கிக்கொண்டார். தகவலறிந்து வந்த ரெங்கம் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையப் படையினர் அவரைப் போராடி வெளியே மீட்டனர்.
இருப்பினும், சம்பவ இடத்திற்கு விரைந்த மருத்துவக் குழுவினர் அப்பெண் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக உறுதிப்படுத்தினர். அவரது சடலம் பிரேதப் பரிசோதனைக்காக ‘எஞ்சே பெசார் ஹாஜா கல்சோம்’ மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது,” என்று பஹ்ரின் தெரிவித்தார்.
இச்சம்பவம் குறித்துச் சாலைப் போக்குவரத்துச் சட்டம் 1987-இன் பிரிவு 41(1)-இன் கீழ் போலிஸார் விசாரணை நடத்தி வரும் நிலையில், விபத்தைக் கண்ட சாட்சிகள் யாரேனும் இருந்தால் போலிசில் தகவல் அளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.



