இராகவன் கருப்பையா – ஒருவரின் இறப்புச் செய்தி வரும் போது யாரிடம் எப்படி அனுதாபம் தெரிவிப்பது எனும் வழிமுறைகளை இன்னமும் நிறைய பேர் தெரிந்து கொள்ளாமல் இருக்கின்றனர்.
பொதுவாக, மரணமடைந்த ஒருவருடைய குடும்பத்தினரிடமோ, நெருங்கிய உறவுகளிடமோ, நண்பர்களிடமோ, “எனது ஆழ்ந்த அனுதாபங்கள்,” என்று குறிப்பிடுவதுதான் முறை, வழக்கமும் கூட.
அல்லது, “உங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்,” என்று கூடச் சொல்லலாம். ஆனால் இவற்றை சம்பந்தப்பட்டவர்களிடம் நேரடியாகவோ, தொலைபேசி வாயிலாகவோ, குறுஞ்செய்தி அல்லது புலனம் வழியிலோ தெரிவிக்க வேண்டும். இதர பல தளங்களைக் கூட நாம் பயன்படுத்தலாம்.
அதனை விடுத்து, சம்பந்தப்பட்டவர் இடம்பெறாத புலனக் குழுவில், “ஆழ்ந்த அனுதாபங்கள், ஆழ்ந்த இரங்கல்,” என வரிசை பிடித்து செய்திகளை பதிவேற்றம் செய்வதில் அர்த்தமில்லை. அதனால் யாருக்கும் எந்த பயனும் கிடையாது என்பதை நிறைய பேர் உணர்வதில்லை.
இத்தகைய குளறுபடிகள் ஒருபுறமிருக்க, நேரடி அறிமுகமே இல்லாத ஒருவருக்கு இவ்வகையில் அனுதாபம் தெரிவிப்பவர்களும் உள்ளனர். சற்றும் சிந்திக்காமல் ஆர்வக் கோளாரில் மேற்கொள்ளப்படும் இத்தகைய குறைபாடுகளை திருத்திக் கொள்வது அவசியமாகும்.
உதாரணத்திற்கு, தமிழகத்தில் திரைப்பட இயக்குனர் பாரதிராஜா இறந்த போது, நம் நாட்டிலுள்ள பல புலனக் குழுக்களில் “ஆழ்ந்த அனுதாபங்கள், ஆழ்ந்த இரங்கல்,” என சரமாரியாக பதிவேற்றம் செய்தார்கள்.
ஆனால் இந்த புலனக் குழுக்களில் பாரதிராஜாவின் குடும்பத்தினரோ, உறவினர்களோ, நண்பர்களோ யாருமே இல்லையே! அப்படியென்றால் யாரிடம் அந்த அனுதாபங்களை தெரிவிக்கிறார்கள் என்று தெரியவில்லை.
“நானும் அனுதாபம் தெரிவித்துவிட்டேன்,” என சுயமாக பறைசாற்றிக் கொள்வதற்காக அர்த்தமில்லாமல் அப்படி ஒரு காரியம் செய்வதில் யாருக்கு என்ன பயன்?
எனினும், “ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்,” என அவரவர் நம்பிக்கைக்கு ஏற்ப பிரார்த்தனை செய்வதில் தவறில்லை. உலகத்தின் எந்த பகுதியிலிருந்தும் இதனை நாம் செய்யலாம். இதுதான் முறையும் கூட. சம்பந்தப்பட்டவர்களிடம் நேரடியாகத்தான் சொல்ல வேண்டும் எனும் அவசியமில்லை.
பல வேளைகளில் பிறந்தநாள் வாழ்த்துகள் மற்றும் இதர நிகழ்வுகளுக்கு பாராட்டுகள் தெரிவிப்பதிலும் இதே நிலைப்பாடுதான் என்பதும் நமக்கு சற்று வியப்பாகவே உள்ளது.
“இசைஞானி இளையராஜாவுக்கு இன்று பிறந்தநாள்,” என்று ஒரு அறிவிப்பு வந்த மறுகணமே, புவனத்தில் நடக்கும் ஆர்ப்பரிப்புகளுக்கு சில வேளைகளில் அளவே இருக்காது. நமக்கு அது வேடிக்கையாகவும் விந்தையாகவும் கூட இருக்கும்.
“நீங்கள்தான் இசைக்கே அரசன். நீங்கள் நீடூழி வாழ வேண்டும். உங்கள் புகழ் என்றென்றும் ஓங்கியிருந்த வேண்டும்,” என்றெல்லாம் தொடர்ச்சியாக வாழ்த்து மழை பொழிவார்கள். இவ்வாழ்த்துகளைப் பெற்றக் கொள்வதற்கு இந்த புலனக் குழுவில் இளையராஜா இல்லை என்று தெரிந்தும் இந்த ‘டிராமா’ அரங்கேறும்.
ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் தொலைவில் வசிக்கும் இளையராஜாவுக்கு இங்கு என்ன நடக்கிறதென்றே தெரியாது. தேவைதானா இந்நிலை நமக்கு? என்ன செய்கிறோம் எதற்கு செய்கிறோம் என்பதை தெளிவாக உணராமல் இதுபோன்ற பல காரியங்களை அன்றாடம் நாம் செய்து கொண்டுதான் இருக்கிறோம்.
புலன வசதி இலவசமாக உள்ளது என்பதற்காக கட்டுப்பாடில்லாமல், அர்த்தமில்லாமல் நாம் செய்து கொண்டிருக்கும் நிறைய விஷயங்களை மீளாய்வு செய்து நம்மை நாமே திருத்திக் கொள்வது அவசியமாகும்.
இந்நூற்றாண்டின் தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகளில் புலனம் முக்கிய பங்காற்றுகிறது என்பதில் துளியளவும் ஐயமில்லை. உலகின் எந்தப் பகுதியில் இருந்தாலும் உடனே நம்மை அருகில் கொண்டு வந்து இணைக்கும் தன்மையுடைய அதனை ஆக்ககரமாகவும் அர்த்தமுடையதாகவும் பயன்படுத்துவது நம் அனைவருடைய கடமையுமாகும்.
