கோலாலம்பூர்:
புத்ராஜெயாவில் நடைபெற்ற 2026-ஆம் ஆண்டு தேசிய தினக் கொண்டாட்டத்தில், மலேசிய தேசியக் கொடி ஏற்றப்பட்டு ‘நெகாராக்கூ’ தேசிய கீதம் ஒலித்தபோது முழங்கப்பட்ட 14 பீரங்கி குண்டுகளின் சத்தம் ஆயிரக்கணக்கான பார்வையாளர்களைப் பரவசத்தில் ஆழ்த்தியது.
சிலாங்கூர், சுங்கை புலோ முகாமில் உள்ள அரச பீரங்கிப் படையின் (Royal Artillery Regiment) 41-வது பேட்டரி பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள், 102mm M102 ஹவிட்சர் (Howitzer) ரக பீரங்கிகள் மூலம் இந்த முழக்கங்களை மிகத் துல்லியமான நேரக் கட்டுப்பாட்டுடன் செய்து முடித்தனர்.
இப்படைப் பிரிவிற்குத் தலைமை தாங்கிய 35 வயதான கேப்டன் முகமட் ஜமீர் ஜோல்கைஃப்லி (Muhammad Zameer Zolkaifli) தெரிவிக்கையில், தேசிய கீதம் ஒலிக்கும் 1 நிமிடம் 16 வினாடிகளுக்குள் அனைத்து 14 பீரங்கி குண்டுகளும் 5 முதல் 6 வினாடிகள் இடைவெளியில் சுடப்பட வேண்டும் என்றார்.
விழா மேடையிலிருந்து சுமார் 500 மீட்டர் தொலைவில் உள்ள துவாங்கு மீசான் ஜைனல் அபிடின் மசூதிக்கு அருகிலுள்ள நிறுத்துமிடத்திலேயே 6 பீரங்கிகளும் வைக்கப்பட்டிருந்தன. தொலைத்தொடர்பு சிக்னல் தடைகளுக்கு மத்தியிலும், வாக்கி-டாக்கி (Walkie-talkie) மூலம் தொடர்புகொண்டு 100% துல்லியத்துடன் இந்த முழக்கங்கள் வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டன.
மாட்சிமை தங்கிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் மற்றும் பேரரசியார் ராஜா சரித் சோஃபியா ஆகியோர் 69-ஆவது தேசிய தினக் கொண்டாட்டத்தை நேரில் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இந்நிகழ்வில் பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம், துணைப் பிரதமர் டத்தோஶ்ரீ டாக்டர் அகமட் ஜாஹித் ஹமிடி, தகவல் தொடர்பு அமைச்சர் டத்தோஶ்ரீ ஃபஹ்மி ஃபட்சில் உள்ளிட்ட அமைச்சர்களும் கலந்து கொண்டனர்.
“மலேசியா மடானி: செழிப்பின் பயன்களைத் துய்த்தல்” என்ற கருப்பொருளில் நடைபெற்ற விழாவில் 76 அணிவகுப்புக் குழுக்கள், 22 இசைக்குழுக்கள் என 10,819 பேர் அணிவகுப்பில் பங்கேற்றனர். இக்கொண்டாட்டத்தை 80,000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் நேரில் கண்டு களித்தனர்.



