ஸ்டாலின் அறிவித்த காஞ்சிபுரம் புது நகர திட்டத்தை ரத்து செய்த விஜய்.. வெளியான பரபர உத்தரவு!
விஜய் தலைமையிலான தமிழ்நாடு அரசு, முன்னாள் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியில் அறிவிக்கப்பட்ட காஞ்சிபுரம் புதிய நகர மேம்பாட்டுத் திட்டம் மற்றும் பாரம்பரியப் பகுதி புனரமைப்புத் திட்டத்தை (Kancheepuram New Town Development Plan and Heritage Revitalization Plan) அதிகாரப்பூர்வமாக ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.
முக.ஸ்டாலின் ஆட்சி காலத்தில் 2023ஆம் ஆண்டு திமுக அரசு காஞ்சிபுரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள 18 கிராமங்கள் குறிப்பாக நெடுஞ்சாலைகள் உள்ள பகுதிகள் என மொத்தம் 62.78 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் புதிய நகர் வளர்ச்சித் திட்டத்தை அறிவித்தது.

இத்திட்டத்தின் மூலம் காஞ்சிபுரத்தின் திட்டமிடப்படாத நகர வளர்ச்சியை கட்டுப்படுத்தி முறையான நகரமாக மாற்றும் நோக்குடன் இத்திட்டம் தமிழ்நாடு நகர் மற்றும் ஊரமைப்புச் சட்டத்தின் கீழ் சென்னை பெருநகர வளர்ச்சி அமைப்பான CMDA மூலம் இப்புதுநகர திட்டம் தயாரிக்கப்பட்டது.
மேலும் இத்திட்டத்தின் கீழ் வேகமாக வளர்ந்து வரும் காஞ்சிபுரத்தில் போக்குவரத்து நெரிசலை குறைப்பது, இதேவேளையில் காஞ்சிபுரத்தில் முழுவதும் இருக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க பகுதிகளை பாதுகாப்பது ஆகியவை இந்த திட்டத்தின் முக்கிய நோக்கங்களாக இருந்தது.
ஆனால் விஜய் தலைமையிலான அரசு வளர்ச்சி திட்டங்களை மறு ஆய்வு செய்யும் விதமாக பல்வேறு திட்டங்களை ரத்து செய்தும், மாற்றி அமைத்தும், திருத்தியும் வருகிறது. இதன் அடிப்படையில் தற்போது ஸ்டாலின் அரசால் அறிவிக்கப்பட்ட வளர்ச்சி திட்டங்களில் ரத்து செய்யப்பட்ட லிஸ்டில் இதுவும் சேர்ந்துள்ளது.
மேலும் விஜய் தலைமையிலான தமிழ்நாடு அரசு இத்திட்டத்தை ரத்து செய்ததற்கான முழுமையான காரணங்கள் அல்லது விளக்கங்களை தனது அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை. இந்த உத்தரவில் தமிழக அரசின் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறையின் முதன்மை செயலாளரான கிர்லோஷ் குமார் கையெழுத்திட்டு உள்ளார்.
மேலும் காஞ்சிபுரம் புது நகர திட்ட ரத்து உத்தவில் திருமழிசை, மீஞ்சூர், திருவள்ளூர், செங்கல்பட்டு, மறைமலை நகர், ஸ்ரீபெரும்புதூர் ஆகிய மற்ற புது நகர் வளர்ச்சித் திட்டங்களின் நிலையும் கேள்விக்குறியாகி உள்ளது.
கடந்த திமுக ஆட்சியில் சென்னை மற்றும் சென்னையை சுற்றியுள்ள பகுதிகளில் வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்தவும், மேம்பட்ட நகர அமைப்பை உருவாக்கவும் புதுநகர் வளர்ச்சி திட்டங்கள் கொண்டு வரப்பட்டு செயல்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

