Cricket
oi-Yogeshwaran Moorthi
மும்பை: சிஎஸ்கே அணியின் 25% பங்குகளை வாங்க தோனி பேச்சுவார்த்தை நடத்தியதாக வெளியான தகவல் தொடர்பாக முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா பேசி இருக்கிறார். ஐபிஎல் தொடரில் எந்த அணியும் இனி 25% பங்குகளை விட்டுக் கொடுக்காது என்று கூறிய ஆகாஷ் சோப்ரா, தோனி மீது வேண்டுமென்றே தவறான தகவலை சிலர் கட்டம்கட்டி பரப்புகிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.
அண்மையில் சிஎஸ்கே அணியின் 25% பங்குகளை தோனி வாங்க விருப்பம் தெரிவித்து அந்த அணி நிர்வாகத்துடன் பேசியதாக தகவல் வெளியாகியது. ஆனால் சிஎஸ்கே அணி நிர்வாகம் 3.5% பங்குகளை மட்டுமே கொடுக்க முன் வந்ததாகவும், இறுதியாக தோனி 18.5% பங்குகள் கேட்டதாகவும், அதற்கு சிஎஸ்கே நிர்வாகம் 5.5% பங்குகள் வரை கொடுக்க வந்ததாக பேச்சுகள் வெளியாகின.

அதுமட்டுமல்லாமல் இந்த பேச்சுவார்த்தையால் தோனி மற்றும் சிஎஸ்கே அணிக்கு இடையில் மோதல் வெடித்துவிட்டதாகவும் சொல்லப்பட்டது. ஆனால் 2 வாரங்களுக்கு முன்பாக தான் தோனி சென்னை வந்து சிஎஸ்கே நிர்வாகிகளை சந்தித்துவிட்டு சென்றார். இதனால் தோனி மற்றும் சிஎஸ்கே நிர்வாகம் இடையில் எந்த மோதலும் இல்லை என்று பார்க்கப்பட்டது.
இந்த நிலையில் சிஎஸ்கே பங்குகள் தொடர்பாக ஆகாஷ் சோப்ரா பேசியுள்ளார். அதில் ஆகாஷ் சோப்ரா பேசுகையில், ஆர்சிபி அணியை ரூ.16 ஆயிரம் கோடிக்கு வாங்கியதாக சொல்கின்றனர். ஆர்சிபி அணிக்கு சமமான நிலையில் சிஎஸ்கே அணியும் இருக்கிறது. அதன் மதிப்பு என்னவென்பதை உங்களின் எண்ணங்களுக்கு விட்டுவிடுகிறேன். ஆனால் சிஎஸ்கே அணிக்கு இன்னும் 2 லீக் தொடரில் அணிகளை வைத்துள்ளது.
சிஎஸ்கே அணியின் மதிப்பு ரூ.16 ஆயிரம் கோடியாகும். அதில் 25% பங்குகள் என்றால், ரூ.3 ஆயிரம் கோடிக்கு அதிகமாக வரும். அதேபோல் தோனி 25% பங்குகளை கேட்பதெல்லாம் கற்பனையில் கூட நடக்காது. தோனி எப்போதும் தனக்கு இது வேண்டும் என்று கேட்கும் நபர் கிடையாது. அதேபோல் ஐபிஎல் அணிகளில் இனி எந்த அணியும் 25% பங்குகளை விற்க முன் வர மாட்டார்கள்.
அதனால் தோனியை பற்றி வேண்டுமென்றே சில தவறான தகவல் பரப்பப்பட்டுள்ளது. இதனை யார் செய்தார்கள் என்று தெரியவில்லை. இது பொய்யான செய்தி என்பதை சொல்ல என்னிடம் எந்த ஆதாரமும் கிடையாது. ஆனாம் இந்த செய்தி உண்மையில்லை என்று தோன்றி கொண்டே இருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.

